விவசாயிகளிடம் பயிர் கடன்களை வற்புறுத்தி வாங்கக்கூடாது... கூட்டுறவு வங்கிகளுக்கு பதிவாளர் உத்தரவு!
விவசாயிகளிடம் பயிர் கடன்களை வற்புறுத்தி வாங்கக்கூடாது என கூட்டுறவு வங்கிகளுக்கு பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை: விவசாயிகளிடம் பயிர் கடன்களை வற்புறுத்தி வாங்கக்கூடாது என கூட்டுறவு வங்கிகளுக்கு கூட்டுறவு சங்க பதிவாளர் அறிக்கை அனுப்பியுள்ளார். மேலும் குறுகிய கால பயிர்க்கடனை மத்திய கால கடனாக மாற்றவும் வங்கிகளுக்கு பதிவாளர் ஞானசேகரன் அறிவுறுத்தியுள்ளார்.
விவசாயக் கடன்களை ரத்து செய்யவேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் அய்யாக்கண்ணு தலைமையில் 40 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்துக்கு வட மாநில விவசாயிகளும் ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் கூட்டுறவு சங்க பதிவாளர் ஞானசேகரன், கூட்டுறவு வங்கிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில் விவசாயிகளிடம் பயிர் கடனை வற்புறுத்தி வாங்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார். குறுகிய கால பயிர்கடனை மத்திய கால கடனாக மாற்ற வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் மறு உத்தரவு வரும் வரை கடனை திருப்பி கேட்டு நோட்டீஸ் அனுப்ப வேண்டாம் என்றும் அந்த கடிதத்தில் கூறியுள்ளார். விவசாயிகள் கடன் பிரச்சனையால் தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் கூட்டுறவு சங்க பதிவாளரின் இந்த அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.