பள்ளிகள் திறப்பிற்கு முன் அதிகாரிகள் அதிரடி ஆய்வு- தூத்துக்குடியில் 10 பள்ளி வாகனங்கள் தகுதி நீக்கம்
தூத்துக்குடி: தூத்துக்குடி பள்ளிகளில் அதிகாரிகள் நடத்திய அதிரடி ஆய்வில், 10 பள்ளிகளின் வாகனங்கள் சரியில்லை என தெரியவந்தது. இதனால், அவற்றை தகுதி நீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சென்னையில் பள்ளி வாகனம் ஒன்றில் பயணம் செய்த மாணவி ஒருவர், அதிலிருந்த ஓட்டையில் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பள்ளி வாகனங்களில் அதிகாரிகள் ஆண்டுதோறும் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக சிறு குழந்தைகள் படிக்கும் வாகனங்களை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்து அனுமதி வழங்கி வருகின்றனர்.
அதன்படி இந்தாண்டுக்கான சோதனை தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குட்பட்ட அலுவலகங்களில் நடந்து வருகிறது. சப் கலெக்டர் கோபாலசுந்தர்ராஜ் தலைமையில் ஊழியர்கள் கலந்து கொண்டு வாகனங்களை ஆய்வு செய்து வருகின்றனர். அப்போது வாகனங்களில் தீயணைப்பு கருவிகள், முதலுதவி பெட்டி, அவசர காலத்தில் பயன்படுத்த கூடிய வழிகள், இருக்கைகள் உள்ளிட்டவை குறித்து சோதனை நடந்தது.
இதில் இயங்குவதற்கு தகுதியற்ற நிலையில் இருந்த 10 வாகனங்களுக்கான தகுதியை நீக்கி வட்டார போக்குவரத்து அலுவலர் உத்தரவிட்டுள்ளார். மேலும் தீயணைப்பு கருவி, முதலுதவி பெட்டி இல்லாத வாகனங்களுக்கு அவகாசம் கொடுத்து அவறறை சரிசெய்து மீண்டும் ஆய்வு கொண்டு வரும்படி அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இந்த அதிரடி ஆய்வால் பள்ளி நிர்வாகங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.