10ம் தேதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு .. இதுவரை 1450 "காளையர்கள்" முன்பதிவு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க மாடுபிடி வீரர்கள் 1464 பேர் பதிவு செய்துள்ளனர்.
மதுரை: பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வரும் 10ஆம் தேதி நடைபெற உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று ஏறுதழுவ இளங்காளையர்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்கநல்லூரில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வாடிக்கை. உச்சநீதிமன்ற தடையால் 2 ஆண்டுகளாக போட்டிகள் நடைபெறவில்லை.
மாணவர்கள், இளைஞர்களின் தன்னெழுச்சி போராட்டம், புரட்சியினால் அரசு சட்டம் இயற்றியுள்ளது. இதற்கு குடியரசுத்தலைவரும் ஒப்புதல் அளித்ததை அடுத்து அரசிதழில் வெளியாகி உள்ளது.
பல தடைகளை தாண்டி 2 ஆண்டுக்குப் பிறகு அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு உற்சாகமாக நடைபெற்றன. காளைகளை அடக்கியவர்கள் கை நிறைய பரிசுகளை அள்ளிச்சென்றனர்.
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு விழாவிற்காக ஏற்பாடுகள் வெகு விமரிசையாக நடைபெற்று வருகின்றன. ஜல்லிக்கட்டில் பங்கேற்க இருக்கும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது. இதற்காக அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முன்பதிவு செய்தனர்.
மாடுபிடி வீரர்கள், புகைப்படத்துடன் கூடிய ஆவணங்களை சமர்ப்பிப்பதுடன், மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் வீரர்களுக்கான பதிவு எண் கொண்ட அனுமதி ஒப்புகை சீட்டு வழங்கப்பட்டது.
இந்த ஒப்புகை சீட்டுடன் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் நாள் அன்று வரும் மாடுபிடி வீரர்களுக்கு சீருடை அளித்த பின்பே ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட உள்ளதாக விழாக்குழுவினர் தெரிவித்தனர்.
மாடுபிடி வீரர்களின் பெயர், முகவரி, வயது உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய தகவல்களை சேகரிக்கும் பணியில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். மாடுபிடி வீரர்களுக்கு இதயத் துடிப்பு, இரத்த ஓட்டம், உயரம், எடை உள்ளிட்ட மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.
அதிக மாடுகளை அடக்குபவர்களுக்கு கார், இருசக்கர வாகனங்கள், தங்காசுகள் பரிசளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் ஏராளமானோர் ஆர்வத்துடன் முன்பதிவு செய்து வருகின்றனர். இதுவரை1464 பேர் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காளைகளுக்கான முன்பதிவு வரும் 8ம் தேதி நடைபெறுகிறது.
பாலமேட்டில் வருகிற 9ஆம்தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுவதையொட்டி நாளை 7ஆம்தேதி வீரர்கள், காளைகளின் பதிவு நடைபெறுகிறது. மேலும் பாலமேடு ஜல்லிக்கட்டு திடலில் கேலரி, தடுப்புகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.