தேக்கம்பட்டியில் யானைகளுக்கு... கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏக்களுக்கு.. புத்துணர்ச்சி முகாம்!
மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டியில் யானைகள் முகாம் இன்று தொடங்கியுள்ளது. இந்த முகாம் 30 நாட்களுக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டியில் யானைகளுக்கு புத்துணர்வு முகாம் இன்று தொடங்கியுள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 32 கோவில் யானைகள் பங்கேற்றுள்ளன.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டியில் ஆண்டுதோறும் கோவில் யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான முகாம் இன்று தொடங்கியுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் இந்த புத்துணர்வு முகாம் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் அவர் இல்லாமல் நடைபெறும் முதல் யானைகள் புத்துணர்வு முகாம் இதுவாகும்.
முதலாவதாக வந்த காந்திமதி
தமிழகம் முழுவதிலும் இருந்து நேற்று முன்தினம் இரவு அந்தந்த கோயில்களில் இருந்து முகாமிற்கு யானைகள் புறப்பட்டன. நேற்று காலை முதலாவதாக திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி தேக்கம்பட்டி வந்தடைந்தது.
உற்சாக வரவேற்பு
யானைக்கு அதிகாரிகள் மாலை அணிவித்து பழம் கொடுத்து வரவேற்றனர். திருநெல்வேலி சங்கரன் கோயில் கோமதி இரண்டாவதாக வந்தது. தொடர்ந்து யானைகள் ஒன்றன் பின் ஒன்றாக வரத்துவங்கியது.
32 யானைகள் பங்கேற்பு
அதன்படி, நேற்று இரவு வரை 30 யானைகள் வந்தடைந்தன. மேலும் 2 யானைகள் இன்று காலை வந்தன. ஸ்ரீவில்லிப்புத்தூர் யானை நாளை வரவுள்ளது.
சிறப்பு பூஜைகள்
நேற்று வந்த யானைகள் அனைத்தும் மேட்டுப்பாளையம் வனபத்திரகாளியம்மன் கோயில் கொடிமரம் அருகே அழைத்து செல்லப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. நீண்ட தொலைவில் இருந்து யானைகள் வந்ததால் களைப்புடன் காணப்பட்டன.
யானைகளுக்கு மூலிகை உணவுகள்
அறநிலையத்துறை இணைஆணையர் இளம்பரிதி, மாவட்ட வன அலுவலர் ராமசுப்பிரமணியம் ஆகியோர் முகாமில் பாதுகாப்பு பணி குறித்து ஆய்வு செய்தனர். 30 நாள் நடக்கும் இந்த முகாமில் யானைகளுக்கு காலை மற்றும் மாலை என இரண்டு நேரம் மூலிகை கலந்த உணவு வழங்கப்படும்.
தேக்கம்பட்டி முகாமில் யானைகள்
யானைகளின் உடல்நிலையை கண்காணித்து அவற்றுக்கு மருத்துவ சிகிச்சைக்களும் அளிக்கப்படவுள்ளது. இன்று காலை 9 மணிக்கு முகாம் தொடங்கப்பட்டது. வழக்கமாக அமைச்சகர்கள் முகாமை தொடங்கி வைப்பார்கள். தற்போது தமிழக அரசியல் களத்தில் வரலாறு காணாத பரபரப்பு நிலவி வருவதாலும் மன்னார்குடி கோஷ்டியால் எம்எல்ஏக்கள் சிறை வைக்கப்பட்டுள்ளதாலும் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.
கூவத்தூர் முகாமில் எம்எல்ஏக்கள்
யானைகளுக்கு தேக்கம்பட்டியில் புத்துணர்வு முகாம் தொடங்கியுள்ள நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் கூவத்தூர் ரிசார்ட்டில் சசிகலா குடும்பத்தினர் அமைத்துள்ள முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.