கோவை தேக்கம்பட்டியில் யானைகள் புத்துணர்ச்சி முகாம் தொடக்கம்! 33 யானைகள் பங்கேற்பு!
கோவை தேக்கம்பட்டியில் யானைகள் புத்துணர்ச்சி முகாம் தொடங்கியுள்ளது.
Recommended Video
கோவை: தேக்கம்பட்டியில் யானைகள் புத்துணர்ச்சி முகாம் இன்று தொடங்கியது. இதனை அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டியில் ஆண்டுதோறும் கோவில் யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான முகாம் இன்று தொடங்கியது.
தமிழக அரசு சார்பில் இந்த புத்துணர்வு முகாம் நடத்தப்படுகிறது. யானைகளுக்கான இந்த புத்துணர்வு முகாம் திட்டம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்டது.
அலங்கரிக்கப்பட்ட யானைகள்
தமிழகம் முழுவதிலும் இருந்து நேற்று முன்தினம் முதல் அந்தந்த கோயில்களில் இருந்து யானைகள் முகாமிற்கு புறப்பட்டன. அலங்கரிக்கப்பட்ட யானைகள் கோவில்களில் சிறப்பு பூஜைகளுக்கு பின் புறப்பட்டன.
30 யானைகள் வருகை
முகாமிற்கு வந்த யானைகளை அதிகாரிகள் பழங்களை கொடுத்து வரவேற்றனர். இதுவரை தமிழகம் முழுவதிலும் இருந்து 32 கோவில் யானைகளும் புதுச்சேரியில் இருந்து ஒரு யானை என முகாமில் 33 யானைகள் பங்கேற்றுள்ளன.
மருத்துவ சிகிச்சைகள்
48 நாட்கள் நடக்கும் இந்த முகாமில் யானைகளுக்கு காலை மற்றும் மாலை என இரண்டு நேரம் மூலிகை கலந்த உணவு வழங்கப்படும். யானைகளுக்கு நடைபயிற்சி உள்ளிட்ட உடற்பயிற்சிகளும் அளிக்கப்படவுள்ளது. யானைகளின் உடல்நிலையை கண்காணித்து அவற்றுக்கு மருத்துவ சிகிச்சைக்களும் வழங்கப்படவுள்ளது.
அமைச்சர்கள் பங்கேற்பு
அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் யானைகளுக்கு பழங்கள் மற்றும் உணவுகளை கொடுத்து இந்த முகாமை தொடங்கி வைத்தனர். இதில் கோவை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
குஷியில் யானைகள்
இந்த முகாம் வரும் பிப்ரவரி 20ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. கடந்த ஆண்டு கண்ணீருடன் பிரிந்த தங்களின் நண்பர்களை காணும் குஷியில் உள்ளன யானைகள்.
மூன்றடுக்கு பாதுகாப்பு
கோவில் யானைகள் முகாமுக்குள் காட்டு யானைகள் நுழையாமல் தடுக்கும் வகையில் முகாமை சுற்றி மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் 5 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.