திருப்பதி துப்பாக்கிச் சூட்டிற்கு கண்டனம்: உயிரிழந்த தொழிலாளியின் உறவினர்கள் போராட்டம்
திருவண்ணாமலை : 20 தமிழக தொழிலாளர்கள் உயிரிழக்கக் காரணமான ஆந்திர போலீசாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு கண்டனம் தெரிவித்து, திருப்பதி வனப்பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக தொழிலாளியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆந்திர மாநிலம் திருப்பதி வனப்பகுதியில் நேற்று அதிகாலை 20 தமிழக தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். செம்மரங்களைக் கடத்த முற்பட்ட அத்தொழிலாளர்கள் தங்களை கற்களை வீசி தாக்கியதாகவும், அதனால் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் ஆந்திர போலீசார் விளக்கமளித்துள்ளனர்.
ஆனால், தமிழக தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட என்கவுண்டர் என ஆந்திர எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
இதற்கிடையே துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் உடல்கள் திருப்பதி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப் பட்டுள்ளது. மேலும், பலியானவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணி தீவிரமாக மேற்கொள்ளப் பட்டு வருகிறது. உயிரிழந்தவர்களில் இதுவரை 7 பேரின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருப்பதி துப்பாக்கிச் சூட்டில் பலியான மகேந்திரன் என்பவரது உறவினர்கள் திருவண்ணாமலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆந்திர போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து அவர்கள் கண்ணமங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.