ஆந்திர என்கவுண்டரில் பலியான 2 பேரின் உடல்களோடு உறவினர்கள் சாலை மறியல்
திருவண்ணாமலை: ஆந்திர என்கவுண்டரில் கொல்லப்பட்ட இரண்டு பேரின் உடல்களோடு அவர்களது உறவினர்கள் திருவண்ணாமலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திர வனப்பகுதியில் நேற்று முன்தினம் அம்மாநில போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழக தொழிலாளர்கள் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலியானவர்களில் 20 பேரில் 7 பேர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
துப்பாக்கிச் சூடு தகவலறிந்து பலியான தொழிலாளர்களின் உறவினர்கள் நேற்று திருவண்ணாமலையில் சாலை மறியல் மற்றும் போலீஸ் நிலைய முற்றுகை உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர்.
பின்னர், ஆந்திரா புறப்பட்டுச் சென்ற பலியானவர்களின் உறவினர்கள், பிரேத பரிசோதனைக்குப் பின் உடல்களை வாங்க மறுத்தனர். இது திட்டமிட்ட படுகொலை எனக் கூறி, இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தும் வரை உடல்களைப் பெற மாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், அதிகாரிகளின் வற்புறுத்தலால் என்கவுண்டரில் பலியானவர்களின் உடல்களைப் பெற்றுக் கொண்டு உறவினர்கள் தமிழகம் திரும்பினர்.
பலியான இரண்டு பேரின் உடல்களோடு திருவண்ணாமலை வந்து சேர்ந்த உறவினர்கள், படவேடு அருகில் வேட்டகிரிபாளையத்தில் கிராம மக்களோடு சேர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தை தடுத்த நிறுத்த போலீசாருக்கும், கிராமமக்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
20 தமிழர்களின் உயிரைக் குடித்த ஆந்திர என்கவுண்டர் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என சாலை மறியலில் ஈடுபட்ட கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.