துப்பாக்கிச் சூட்டில் பலியான 12 பேரின் உடல்களை வாங்க உறவினர்கள் மறுப்பு!
துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் உடல்களை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்து இரண்டு நிபந்தனை விதித்துள்ளனர்.
Recommended Video
தூத்துக்குடி : ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான நடந்த போராட்டத்தில், துப்பாக்கிச்சூட்டில் பலியான 12 பேரின் உடல்களை வாங்க உறவினர்கள் மறுத்துள்ளனர். ஆலையை நிரந்தரமாக மூடுவதாக எழுத்துப் பூர்வமாக எழுதிக் கொடுத்தால் மட்டுமே உடல்களை வாங்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையைக் கண்டித்து மக்கள் நடத்தி வரும் போராட்டம் நேற்றுடன் 100வது நாளை எட்டியது. இதற்காக பேரணியாகச் சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பதற்காக அனுமதி மறுக்கப்பட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆனால், தடையையும் மீறி பல்லாயிரக்கணக்கானோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர். அவர்களின் மீது போலீஸார் தடியடி தாக்குதல் நடத்தினர். மக்களை கட்டுப்படுத்த போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 12 பேர் பலியாகினர்.
இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பலியானவர்களின் உடல்களை வாங்க உறவினர்கள் மறுத்து, இரண்டு நிபந்தனைகள் விதித்துள்ளனர்.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாக எழுத்துப் பூர்வமாக எழுதித் தர வேண்டும் என்றும், துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லாவிட்டால் உடல்களை வாங்கமாட்டோம் என்றும் தெரிவித்துள்ளனர்.