இலங்கை சிறையில் இருந்து தாயகம் திரும்பிய 77 மீனவர்கள்... குடும்பத்தினர் மகிழ்ச்சி - வீடியோ
இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 77 மினவர்கள் தமிழகத்தை வந்தடைந்தனர். அனைவரையும் குடும்பத்தினர் உற்சாகமாக வரவேற்றனர்.
சென்னை: இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 77 பேரை கடற்படை அதிகாரிகள் தமிழகம் அழைத்து வந்தனர்.
இலங்கை கடற்படை, எல்லைதாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழகத்தைச் சேர்ந்த 92 மீனவர்களை கடந்த மூன்று மாதங்களில் கைது செய்து சிறையில் அடைத்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, நல்லெண்ண அடைப்படையில் 77 மீனவர்களை விடுதலை செய்வதாக அறிவித்தது.
அதனையடுத்து விடுதலை செய்யப்பட்ட 77 மீனவர்களை இந்திய தூதரக அதிகாரிகளிடம் , இலங்கை தூதரக அதிகாரிகள் ஒப்படைத்தனர். அவர்களை இந்திய கடற்படை அதிகாரிகள் தமிழகத்து அழைத்து வந்தனர். தாயகம் திரும்பியதால் 77 மீனவர்களின் குடும்பமும் எல்லையில்லாத மகிழ்ச்சி அடைந்தனர்.
விடுதலை செய்யப்பட்டவர்களில் 16 பேர் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள். 6 பேர் நம்புதாளை, 12 பேர் மண்டபத்திற்கு சென்றனர். 18 பேர் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். 17 பேர் காரைக்காலை பகுதியை சேர்ந்தவர்கள். 8 பேர் நாகப்பட்டினத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த 77 மீனவர்கள் விடுதலையானதை அடுத்து, இலங்கை சிறையில் இன்னும் 15 மீனவர்கள் சிறையில் துன்பப்பட்டு வருகின்றனர். அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.