தமிழகத்தின் இன்னொரு கீழடியா திண்டுக்கல் பாடியூர் கோட்டைமேடு?நேரடி ஆய்வில் புதிய தகவல்கள்- Exclusive
தமிழகத்தின் இன்னொரு கீழடியாக திண்டுக்கல் பாடியூர் கோட்டைமேடும் இருக்கலாம் என தொல்லியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Recommended Video
திண்டுக்கல்: தமிழகத்தின் இன்னொரு கீழடியாக பழந் தமிழர் நாகரீக சான்றுகளை திண்டுக்கல் பாடியூர் கோட்டைமேடு பகுதி தன்னுள் புதைத்து வைத்திருக்கலாம் என்கின்றனர் தொல்லியல் ஆய்வாளர்கள்.
திண்டுக்கல்- எரியோடு சாலையில் குளத்தூரில் இருந்தும் திண்டுக்கல்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் முள்ளிப்பாடியில் இருந்தும் உள்ளே பாடியூர் சென்றடையலாம்.
30 அடி உயர மண்மேடுதான் இப்போதும் கோட்டைமேடு என அழைக்கப்படுகிறது. மிக பரந்துபட்ட அளவில் இந்த கோட்டை மேடு இருந்திருக்கிறது. அரசு பள்ளிக்கூடம் கட்டுவதற்காக இந்த மண்மேட்டின் பெரும்பகுதி அண்மையில்தான் இடிக்கப்பட்டிருக்கிறது.
மூடப்பட்ட கிணறு
மேலும் இக்கோட்டை மேடு பகுதியில் பிரமாண்ட பழங்கால கிணறு ஒன்று இருந்திருக்கிறது. இந்த மண்மேட்டை இடித்துதான் அந்த பிரமாண்ட கிணறையே பள்ளிக் கட்டிடத்துக்காக மூடியும் இருக்கிறார்கள்.
மண்மேடுகளில் புதையுண்ட பானைகள்
மண்மேடுகளுக்குள் பழங்கால பானைகள் புதையுண்டு கிடப்பதை இப்போதும் காண முடியும். மேலும் அந்த பகுதி எங்கும் சிவப்பு நிறத்திலான பழங்கால மண்பானைகளின் சிதறல்களையும் நேரில் காண முடிகிறது.
கல்லாறு கோட்டை
இந்த கோட்டைமேடு பகுதி கல்லாறு என்ற ஆற்றின் கரையோரத்தில் இருக்கிறது. திருமலைக்கேணி மலைப் பகுதியில் இருந்து வெளியேறும் நீர்தான் கல்லாறாக ஓடி குளத்தூர் அருகே சந்தானவர்த்தி ஆற்றுடன் கலக்கிறது. இந்த ஆறுகள் வேடசந்தூர் குடகனாற்றில் சங்கமிக்கின்றன.
முனியப்பன் கோவில்
இக்கோட்டைமேடு மீது இப்போதும் பழங்கால கல் கட்டிடம் ஒன்று இருக்கிறது. முனியப்பன் கோவிலாக இப்போது சிறிய அளவில் இங்கே வழிபாடு நடத்தப்படுகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்
இதே கல் கட்டிடத்தில் மீன்சின்னம் பொறித்த பிரம்மாண்ட கதவு இருந்ததாகவும் இக்கதவு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் ஊர் பெரியவர் ஒருவர் நமது ஒன் இந்தியா தமிழ் செய்தியாளரிடம் கூறினார். மேலும் பள்ளிக்கூடத்துக்காக கோட்டை மேடு இடிக்கப்பட்டபோது மிக நீண்ட பெரும் பெரும் பாறை கற்கள் வெளியே எடுக்கப்பட்டதாகவும் பாடியூர் பெரியவர்கள் கூறுகின்றனர்.
பாடி எனும் பெயர்களில் ஊர்கள்
இங்கே மிக பிரமாண்ட கோட்டை ஒன்று பழந்தமிழர் காலத்தில் இருந்திருக்கலாம் என்றே கருதப்படுகிறது. சங்க காலங்களில் ஆயுதக் கிடங்குகள் இருக்கும் இடங்களுக்கு பாடி என்ற பெயர் உண்டு. பாடியூரை சுற்றிய கிராமங்கள் அனைத்தும் பாடி என்ற பெயரிலேயே அழைக்கப்படுகின்றன. சீலப்பாடி, முள்ளிப்பாடி, பாடியூர், மேல்பாடியூர், தாமரைப்பாடி என அடுத்தடுத்து பாடி என்கிற பெயர்களிலேயே இங்கு ஊர்கள் அமைந்திருக்கின்றன.
அகழாய்வு அவசியம்
இந்த 'பாடி' பெயர்களிலான ஊர்கள் அனைத்தும் சிற்றாறுகளின் கரைகளிலேயே அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. பாடியூரில் எஞ்சியிருக்கும் பகுதியை முழுமையாக அகழாய்வு செய்தால் பழந்தமிழர் நாகரிகத்தின் சான்றுகள் ஏராளம் கிடைக்கும் என்றே நம்பப்படுகிறது.
மக்கள் பிரதிநிதிகள், ஆட்சியாளர்களுக்கு வேண்டுகோள்
பாடியூர் வேடசந்தூர் சட்டசபை தொகுதிக்குட்பட்டது. அதாவது லோக்சபா துணைசபாநாயகர் தம்பிதுரையின் கரூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்டது. ஆட்சியாளர்களும் மக்கள் பிரதிநிதிகளும் அக்கறையுடன் செயல்பட்டு அகழாய்வுக்குட்படுத்தினால் பாடியூர் பழந் தமிழர் நாகரிகத்தை நிறுவக் கூடிய இன்னொரு கீழடியாகவும் இருக்கக் கூடும் என்கின்றனர் தொல்லியல் ஆய்வாளர்கள்.