நவம்பர் 16ம் தேதிக்குள் சிவாஜி கணேசன் சிலையை அகற்ற வேண்டும்... உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சென்னை: சென்னை மெரீனா கடற்கரையோரம், காமராஜர் சாலையில் உள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையை நவம்பர் 16ம் தேதிக்குள் தமிழக அரசு அகற்ற வேண்டும். அகற்றி விட்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவிட்டுள்ளது.
சென்னை திருவல்லிகேணியை சேர்ந்த நாகராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவதிப்பு வழக்கைத் தொடர்ந்துள்ளார். அதில்,
சென்னை மெரினா கடற்கரை முன்புள்ள, காமராஜர் சாலை, ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் கடந்த 2006ம் ஆண்டு நடிகர் சிவாஜிகணேசனின் திருவுருவச் சிலை நிறுவப்பட்டது. இந்த சிலை, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதாக வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதி்மன்றம், சிவாஜி சிலையை அகற்றுவது குறித்த என்னுடைய கோரிக்கையை பரிசீலிக்கவேண்டும் என்று கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் 23ம் தேதி தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
ஆனால், இதுவரை தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இந்த கோர்ட்டின் உத்தரவை மதிக்காத தமிழக நெடுஞ்சாலைத்துறை செயலாளர் ராஜீவ்ரஞ்சன் மீது கோர்ட் அவமதிப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சத்தீஷ்குமார் அக்னிஹோத்ரி, கே.கே.சசிதரன் முன்பு விசாரணையில் இருந்து வருகிறது. இந்த மனு மீது தமிழ் வளர்ச்சி மற்றும் மக்கள் தொடர்புத்துறை செயலாளர் எம்.ராஜாராம் தாக்கல் செய்த பதில் மனுவில்,
உயர்நீதிமன்றம் மீது உயர்ந்து மரியாதையும், மதிப்பும் கொண்டுள்ளேன். ஒருபோதும், இந்த கோர்ட் உத்தரவை அவமதித்தது கிடையாது. காமராஜர் சாலை - ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில், மெரினா கடற்கரைக்கு எதிர்புறம் நிறுவப்பட்டுள்ள நடிகர் சிவாஜிகணேசன் சிலையை அகற்றக்கோரி மனுதாரர் நாகராஜன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, சிலையை அகற்றுவது குறித்து தமிழக அரசு விரைவாக பரிசீலிக்கவேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த நிலையில், நடிகர் சிவாஜி கணேசனுக்கு, அடையாறு ஆந்திர மகிளா சபா அருகில் மணிமண்டபம் கட்டப்படும் என்று கடந்த ஆகஸ்டு 26ம் தேதி சட்டசபையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்துக்கு, சுற்றுலாத்துறை ஒதுக்கியுள்ள 65 சென்ட் நிலத்தில், இந்த மணிமண்டபம் கட்டப்பட உள்ளது.
இந்த மணிமண்டபம் கட்டப்பட்டவுடன், இந்த இடத்துக்கு மெரினா கடற்கரை எதிரே உள்ள நடிகர் சிவாஜிகணேசன் சிலை மாற்றப்படும். இந்த ஐகோர்ட்டு உத்தரவை அமல்படுத்த காலதாமதம் ஆவதற்கு நிர்வாக பணிதான் காரணமே தவிர, வேறு எந்த ஒரு உள்நோக்கமும் அரசுக்கு கிடையாது. எனவே, இந்த கோர்ட்டு அவமதிப்பு மனுவை முடித்து வைக்கவேண்டும் என்று அவர் கோரியிருந்தார்.
இதைத் தொடர்ந்து தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் சோமையாஜியிடம், மணிமண்டபம் கட்டும் பணி எப்போது தொடங்கப்படும்?, அந்த பணி எப்போது முடிவடையும்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு, இதுகுறித்து அரசின் கருத்தை கேட்டு தெரிவிப்பதாக அட்வகேட் ஜெனரல் கூறினார். இதையடுத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. அப்போது நெடுஞ்சாலைத்துறை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் தரவும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
அதன்படி இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது நெடுஞ்சாலைத்துறை செயலாளர் நேரில் ஆஜரானார். அப்போது அவர் விளக்கம் தருகையில், சிவாஜி கணேசன் மணிமண்டபம் கட்டி முடிக்கும் பணி அடுத்த ஆண்டு வாக்கில் முடிவடையும் என்று தெரிவித்தார். அப்போதுதான் சிலையை அங்கு இடமாற்றம் செய்ய முடியும் என்றும் தெரிவித்தார்.
இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், சிவாஜி சிலையை நவம்பர் 16 க்குள் அகற்ற வேண்டும். சிலையை அகற்றிவிட்டு உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
சிலையை அகற்றுமாறு உயர்நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டுள்ளதால் பரபரப்பு கூடியுள்ளது. சிலையை தமிழக அரசு அகற்றுமா, அகற்றினால் எங்கு கொண்டு போய் வைக்கும், கண்ணகி சிலையை வைத்தது போல கோணிப்பையைப் போட்டு மூடி மியூசியத்தில் வைப்பார்களா என்று பற்பல கேள்விகள் எழுந்துள்ளன.