தாமரை இருந்தாலும் தப்பு, இல்லைனாலும் தப்பா? செய்தியாளர்களிடம் சீறிய தமிழிசை
பாபா முத்திரையில் இருந்து தாமரையை நீக்கியது ரஜினியின் தனிப்பட்ட முடிவு என்று தமிழிசை தெரிவித்து உள்ளார்.
Recommended Video
சென்னை : ரஜினியின் பாபா முத்திரையில் இருந்து தாமரை நீக்கப்பட்டது அவரது தனிப்பட்ட முடிவு என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்திரராஜன் தெரிவித்து உள்ளார்.
கடந்த டிசம்பர் 31ம் தேதி ரசிகர்களை சந்தித்த ரஜினி தான் தனிக்கட்சி தொடங்க உள்ளதாகவும், அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலை அந்த கட்சியின் மூலம் போட்டியிட உள்ளதாகவும் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து அடுத்தகட்ட அரசியலுக்கான விஷயங்களையும் அவர் செயல்படுத்தி வருகிறார்.
ரஜினி தனது அரசியல் முத்திரையாக பாபா முத்திரையை பயன்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல, ரசிகர்கள் சந்திப்பு, இணையதளம் உள்ளிட்ட அனைத்திலும் அந்த முத்திரை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
முதலில் அந்த முத்திரைக்கு கீழ் இருந்த வெள்ளைத்தாமரை படம் தற்போது அகற்றப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே, ஆன்மீக அரசியல் என்று ரஜினி அறிவித்து இருப்பதன் மூலம், பாஜக தான் ரஜினியை இயக்குகிறது என்று சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ரஜினியின் பாபா முத்திரையில் இருந்த வெள்ளைத்தாமரை தற்போது நீக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்திரராஜன் இன்று சென்னை முத்துப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ரஜினியின் பாபா முத்திரையில் தாமரை நீக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த தமிழிசை, தாமரை படத்தை நீக்குவதும், வைப்பதும் ரஜினியின் தனிப்பட்ட முடிவு. இதில் பாஜகவிற்கு எந்த பின்னடைவும் இல்லை. இதை வைத்துக்கொண்டு ரஜினியுடன் பாஜக கூட்டணி என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாது என்று தமிழிசை தெரிவித்து உள்ளார்.