கோவையில் காவல்துறை அருங்காட்சியகம்.. முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்!
கோவையில் புதுப்பிக்கட்ட காவலர் அருங்காட்சியகத்தை முதல்வர் திறந்து வைத்தார்.
Recommended Video
கோவை: கோவையில் புதுப்பிக்கப்பட்ட காவலர் அருங்காட்சியகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.
கோவை ரயில் நிலையம் எதிரே, எஃப்.ஏ.ஹாமில்டன் எனும் ஆங்கிலேயே காவல்துறை அதிகாரியால் 1918-ஆம் ஆண்டு 3,488 சதுர அடியில் ஹாமில்டன் போலீஸ் கிளப் கட்டப்பட்டது.
இதில், 16 அறைகள், டேபிள் டென்னிஸ் அரங்கம், நூலகம், சமையல் அறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இருந்தன.
புனரமைப்பு பணி தீவிரம்
இதனிடையே கடந்த சில ஆண்டுகளாக இந்தக் கட்டடம் போதிய பராமரிப்பு இல்லாமல் பாழடைந்து கிடந்தது. அதைத் தொடர்ந்து, கோவை மாநகர காவல் ஆணையராக இருந்த அமல்ராஜ் ஹாமில்டன், கிளப்பை 2016-ஆம் ஆண்டு புனரமைத்து, காவலர் அருங்காட்சியகமாக மாற்றத் திட்டமிட்டார். அதன்படி, இதற்கான பணிகள் ரூ. 60 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வந்தன. தற்போது, காவலர் அருங்காட்சியகத்தின் புனரமைப்புப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன.
அருங்காட்சியகம் திறந்து வைப்பு
இந்நிலையில், உதகையில் நடைபெறும் மலர்க் கண்காட்சியை தொடக்கிவைக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கோவை வழியாக உதகை செல்ல உள்ளார். எனவே இன்று கோவை வந்த முதல்வர், அருங்காட்சியகத்தை பொது மக்களின் பயன்பாட்டுக்காகத் திறந்துவைத்தார். இந்த விழாவில் அமைச்சர் வேலுமணி, உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் முதலமைச்சர் தெரிவித்ததாவது:
வாள், துப்பாக்கி, சீருடைகள்
இது வரலாற்று சிறப்பு மிக்க மியூசியம். அந்தகாலத்தில் இருந்து தற்போது வரை காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு உபகரணங்கள் இங்கு காட்சிபடுத்தப்பட்டுள்ளன. 144 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டிடம், பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு மிக சிறந்த முறையில் துப்பாக்கி, வாள், சீருடைகள் மற்றும் காவல்துறையில் பயன்படுத்திய அனைத்தும் வைக்கப்பட்டுள்ளன.
விமானம் இயக்கப்படும்
மாணவர்கள் இளைஞர்களின் அறிவு பூர்வமாக திறன்மேம்படுத்தும் வகையில் இந்த மியூசியம் அமைந்துள்ளது. கோவையில் இரவு தங்கி செல்லும் விமானத்திற்கு அரசு எரிபொருள் வரி சலுகை வழங்கி உள்ளது. இதனால், பல்வேறு பெரிய நகரங்களுக்கு கோவையில் இருந்து விமானம் இயக்கப்படும். இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்தார். எடியூரப்பா பதவி ஏற்பு குறித்தும், எஸ்.வி.சேகர் கேள்வி குறித்தும் பதில் அளிக்க முதல்வர் மறுத்து விட்டார்.
மலையூர் மம்மட்டியான் துப்பாக்கி
இதன் திறப்பு விழாவில் டி்ஜி்பி ராஜேந்திரன், கோவை மாநகர் காவல் துறை ஆணையர் பெரியய்யா உட்பட காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த அருங்காட்சியகத்தில், காவலர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள், சீருடைகள், மலையூர் மம்மட்டியான், சந்தன கடத்தல் வீரப்பன் ஆகியோர் பயன்படுத்திய துப்பாக்கிகள், பீரங்கிகள், ஏவுகணைகள், நீர் மூழ்கிக் கப்பல் போன்ற பல்வேறு அரிய பொருள்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.