ண்ணோவ்.. லஞ்சம் வாங்குவதில் இதெல்லாம் வேற லெவல்!
லஞ்சம் வாங்க தனியாக வீடு எடுத்திருக்கிறார் அதிகாரி ஒருவர்.
வேலூர்: லஞ்சம் வாங்குவதே தப்பு. அதை வேற லெவல்ல நின்னு யோசித்திருக்கார் ஒருத்தர்!!
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி வள்ளலார் நகரில் நகரமைப்புத்துணை இயக்குனர் அலுவலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேதான் உள்ளது. இங்கு துணை இயக்குநராக பணியாற்றி வருபவர் சுப்ரமணியம்.
திடீர் சோதனை
இங்கு வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவுகளுக்கு அங்கீகாரம், பட்டா, மாற்றம் அளித்தல் உள்ளிட்ட பல பணிகள் நடைபெற்று வந்தன. இந்த வேலைகளுக்கெல்லாம் சுப்பிரமணியம் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு புகார்கள் வந்தன. அதனால் நேற்றுமுன்தினம் திடீரென அலுவலகம் உள்ளே அதிகாரிகள் நுழைந்து சோதனை நடத்தினர். அப்போது, ரூ.4 லட்சம் வரை கணக்கில் காட்டப்படாத பணம் சிக்கியது. விஷயம் இதோடு முடியவில்லை.
அது அலுவலகமே இல்லை
கணக்கில் வராத பணம் சிக்கிக் கொண்டாலும் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தொடர்ந்து சுப்பிரமணியம் மீது சந்தேகம் இருந்தது. அதனால் விசாரணையை தீவிரமாக நடத்தினர். அப்போது, அந்த அலுவலகம் பக்கத்திலேயே மற்றொரு அலுவலகம் இயங்குவதாக தெரியவந்தது. இங்குதான் ஒரு அலுவலகம் இருக்கிறதே, இதை தவிர வேறென்ன அலுவலகம் இருக்க முடியும், என்று அதிர்ச்சியடைந்து அந்த இடத்தை தேடி சென்றனர். கடைசியில் பார்த்தால் அது அலுவலகமே இல்லை, வீடு என தெரிய வந்தது.
லஞ்சம் வாங்க வீடு
சுப்பிரமணியம் லஞ்சம் வாங்குவதற்காகவே அந்த வீடாம். யாரிடமும் சிக்கிக்கொள்ளாமல் லஞ்சம் வாங்கவும், வாங்கிய லஞ்ச பணத்தை பிரிக்கவும்தான் அந்த வீடு எடுத்திருக்கிறார். அரசு அலுவலகத்தில் இருந்த பர்னிச்சர்களை எல்லாம் இங்கே கொண்டு வந்து போட்டு அலுவலகம் போல பயன்படுத்தி வந்திருக்கிறார். இதற்காக சம்பளம் கொடுத்து வேலைக்கு ஆட்களை நியமித்திருக்கிறார். இவர்கள் எல்லாம் ஓய்வுப்பெற்ற பணியாளர்களாம். இவர்களுக்கு லட்சக்கணக்கில் மாத மாதம் சம்பளமும் கொடுத்து வந்துள்ளார்.
என்னே ஒரு சாமர்த்தியம்!
சம்பளமே லட்ச லட்சமாக கொடுத்தால், சுப்பிரமணியம் வாங்கும் லஞ்சம் பணம் கோடிக்கணக்கில். இதையெல்லாம் பார்த்து அப்படியே உறைந்து நின்றார்கள் அதிகாரிகள். கடைசியில், அங்கிருந்த ஏராளமான ஆவணங்களை கைப்பற்றிய போலீசார் சுப்பிரமணியம் மீது நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்துள்ளனர். அரசு அலுவலகத்தில் லஞ்சம் வாங்கினால் சிக்கி கொள்வோம் என்று வாடகைக்கு வீட்டை எடுத்து லஞ்சம் வாங்கும் அதிகாரியின் சாமர்த்தியத்தை என்னவென்று சொல்வது?