தூத்துக்குடியில் நடத்திய விசாரணை குறித்து ஓரிரு நாட்களில் அறிக்கை தாக்கல்: மாநில மனித உரிமை ஆணையம்
தூத்துக்குடி: துப்பாக்கிச்சூடு தொடர்பாக நடத்திய விசாரணை குறித்து ஓரிரு நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என மாநில மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடியில் நடத்திய விசாரணை குறித்து ஓரிரு நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என மாநில மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடியில் கடந்த 22 மற்றும் 23ஆம் தேதிகளில் ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் மாநில மனித உரிமைகள் ஆணையத்தைச் சேர்ந்த குழுவினர் இன்று தூத்துக்குடியில் ஆய்வு செய்தனர்.
மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர்களான ஜெயசந்திரன் மற்றும் சித்தரஞ்சன் மோகன்தாஸ் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசனை நடத்திய பிறகு கலவரம் நடைபெற்ற பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆட்சியர் அலுவலகம், ஸ்டெர்லைட் குடியிருப்பு உள்ளிட்ட இடங்களில் அவர்கள் ஆய்வு நடத்தினர். மேலும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காயமடைந்தவர்களை மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன் சந்தித்து பேசினார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயச்சந்திரன் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து மாநில மனித உரிமை ஆணைய தலைவரிடம் ஓரிரு நாளில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்தார்.