காதல் விவகாரத்தில் செய்தியாளர் வெட்டிக் கொலை.. திருப்பத்தூரில் பரபரப்பு: வீடியோ
காதல் விவகாரத்தில் செய்தியாளர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர்: திருப்பத்தூரில் செய்தியாளர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் ஜெய்பீம் நகரைச் சேர்ந்தவர் முனிராஜ். இவர் நாளிதழ் ஒன்றில் செய்தியாளராக பணி புரிந்து வந்தார்.
அதே ஊரில் வள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மகள் இந்து. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிவா என்ற இளைஞருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது.
சிவாவும், முனிராஜும் நண்பர்கள். இதனால் சிவா தனது காதல் பற்றி முனிராஜிடம் கூறியிருக்கிறார். சிவாவின் காதலுக்கு உதவி செய்ய இந்துவின் வீட்டிற்கு முனிராஜ் மற்றும் அவரது தம்பி கார்த்திக் ஆகியோர் சென்று தந்தை திருப்பதியிடம் பேசியுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தை இருவருக்கும் இடையே சண்டையாக முற்றியுள்ளது.
ஆத்திரமடைந்த திருப்பதியும், அவரது உறவினரும் சேர்ந்து முனிராஜையும் அவரது தம்பியையும் அறிவாள் கொண்டு சரமாரியாக வெட்டியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த முனிராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் சென்ற கார்த்திக் படுகாயம் அடைந்த நிலையில் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
திருப்பதிக்கும் முனிராஜிக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செய்தியாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பி ஏற்படுத்தியுள்ளது.