நிலத்தகராறில் நிருபருக்கு கத்திக்குத்து: தலைமறைவான மூவருக்கு வலைவீச்சு
நெல்லை: திருநெல்வேலி அருகே நிலத்தகராறில் நிருபரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற மூன்றுபேரை போலீசார் தேடி வருகின்றனர்.
பாவூர்சத்திரம், அரியப்பபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ் இவர் சென்னையில் குமுதம் ரிப்போர்ட்டர் வாரஇதழில் நிருபராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலம், நெல்லை மாவட்டம் கடையம் அருகே எல்லைப்புளியில் உள்ளது. அதில் நெல் பயிரிட்டுள்ளார்.
இவரது நிலத்திற்கு பக்கத்து நிலத்தில் பயிர் செய்துவரும் மகாலிங்கம் மற்றும் அவரது சகோதரர்கள் பாஸ்கரன், சங்கரன் ஆகியோருக்கும் செல்வராஜூக்கும் நிலம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் கடந்த ஞாயிறன்று செல்வராஜ், விவசாய நிலத்திற்கு சென்றிருந்போது அங்கு வந்த மூவரும், முன்விரோதத்தில், அவரை தாக்கி வலதுகையில் கத்தியால் குத்தியதாக தெரிகிறது.
இதில் காயமடைந்த செல்வராஜ் தென்காசி மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார். அவரது புகாரின் பேரில், கடையம் போலீசார், சங்கரன் உள்ளிட்ட மூவர் மீதும் கொலைமுயற்சி வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பாவூர் சத்திரம் பகுதியில் பரப்பரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.