தேவகோட்டையில் வித்தியாசமான குடியரசு தின விழா.. கடலை மிட்டாய் வழங்கி கொண்டாட்டம்!
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் வித்தியாசமான முறையில் குடியரசு தின விழாவை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் கொண்டாடியுள்ளனர்.
வழக்கமாக பிறந்த நாள் கொண்டாட்டம், கொடி ஏற்றுதல் போன்றவற்றில் மிட்டாய் வழங்குவது வழக்கம். குறிப்பாக சாக்லேட்தான் தாராளமாக கொடுக்கப்படும்.
ஆனால் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் பள்ளியில் சற்று வித்தியாசமாக, சாக்லேட் பயன்பாட்டை அறவே தவிர்த்து கடலை மிட்டாய் வழங்குவதை ஊக்கப்படுத்தி வருகின்றனர். இன்று நடந்த குடியரசு தின விழாவிலும் இதைக் காண முடிந்தது.
குடியரசு தின விழா
விழாவிற்கு வந்தவர்களை பள்ளி ஆசிரியை முத்துமீனாள் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். குடியரசு தின விழா தொடர்பாக மாணவி காயத்ரி கவிதையும், குடியாட்சியும், மக்கள் கடமையும் என்கிற தலைப்பில் மாணவர் ராஜேஷ் உரையும் நிகழ்த்தினர்.
நாச்சியார் வேடம் பேட்ட மாணவி
தேசிய கீதத்தின் சிறப்புகளை மாணவி கீர்த்தியாவும், வேலு நாச்சியார் வேடமணிந்து மாணவி தேவதர்ஷினியும், வீரபாண்டிய கட்டபொம்மன் வேடமணிந்து நாடகத்தை மாணவர்கள் ஐயப்பன், சபரி, கார்த்திகேயன் ஆகியோரும் நடத்தினார்கள்.
நோ சாக்லேட்
போக்குவரத்து கழக தேவகோட்டை கிளை மேலாளர் நாகராஜன் கொடி ஏற்றி சிறப்புரையாற்றினார். மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அனைவருக்கும் சாக்லேட் தவிர்த்து கடலை மிட்டாய் இனிப்பு வழங்கப்பட்டது.
பல வருடமாகவே கடலை மிட்டாய்தான்
இப்பள்ளியில் தொடர்ந்து பல ஆண்டுகளாக மாணவர்களின் பிறந்த நாள்களுக்கு அவர்களே சாக்லேட் தவிர்த்து கடலை அச்சு மிட்டாய் இனிப்பாக வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது. விழா நிறைவாக ஆசிரியை முத்துலெட்சுமி நன்றி கூறினார். விழாவில் பேசிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.