மெரீனாவில் குடியரசு தின விழா ஒத்திகை - வரலாறு காணாத அளவிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள்
குடியரசு தினவிழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு மெரீனா கடற்கரை சாலையில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையடுத்து போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
சென்னை: நாட்டின் 68வது குடியரசு தின விழா நாளை கொண்டாடப்படுகிறது. வழக்கமான உற்சாகத்துடன் குடியரசு தினவிழாவை கொண்டாட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
மாணவர்கள் போராட்டம் முடிந்து அமைதி திரும்பியுள்ள நிலையில், குடியரசு தினவிழாவையொட்டி அசம்பாவித சம்பவங்கள் எதுவும் மீண்டும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் போலீசார் உறுதியாக உள்ளனர். இதனை தொடர்ந்து மாநிலம் முழுவதும் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் மெரீனா கடற்கரையிலும் குடியரசு தின கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. குடியரசு தினவிழா நடைபெறும் இடங்களை சுற்றி வரலாறு காணாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி, 3 அல்லது 4 நாட்கள் கடற்கரை சாலையில் ஒத்திகை நடத்தப்படும். ஆனால் இந்த ஆண்டு மாணவர்கள் போராட்டத்தால் அதுபோன்ற ஒத்திகைகள் ரத்து செய்யப்பட்டன.
குடியரசு தின விழா ஒத்திகை
இன்று காலையில் குடியரசு தின ஒத்திகைகள் மெரீனாவில் நடத்தப்பட்டன. அணிவகுப்பு, அலங்கார ஊர்திகள் காமராஜர் சாலையில் அணிவகுத்து சென்றன.
குடியரசு தின விழாவின் போது அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழ்ந்து விடக்கூடாது என்பதற்காக சென்னை மாநகரம் முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பலத்த பாதுகாப்பு
சென்னையில் குடியரசு தினத்தின் போது மாநகர போலீஸ் கமிஷனர் தலைமையில் சட்டம் ஒழுங்கு கூடுதல் கமிஷனர்கள், இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள் ஆகியோரே எப்போதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஆனால் இந்த ஆண்டு மாணவர்களின் போராட்டம் எதிரொலியாக மாநகர போலீஸ் அதிகாரிகளும், கூடுதல் டி.ஜி.பி, ஐ.ஜி, போலீஸ் சூப்பிரண்டு அந்தஸ்திலான போலீஸ் அதிகாரிகளும் பாதுகாப்பு பணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.
நான்கு திசைகளிலும் பாதுகாப்பு
கூடுதல் டி.ஜி.பி.க்களான ராஜேஷ் தாஸ், கரன்சின்கா, சைலேந்திரபாபு, ஜெயந்த் முரளி ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்கும் தலைமை பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ராஜேஷ் தாஸ் மெரீனா கடற்கரையில் விவேகானந்தர் இல்லம் பகுதியில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
கரன்சின்ஹா மேற்கு மண்டலத்திற்குட்பட்ட திருமங்கலம் காவல் நிலைய எல்லை பகுதியிலும், சைலேந்திரபாபு வடக்கு மண்டலத்தில் பூக்கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இடங்களிலும், ஜெயந்த் முரளி தெற்கு மண்டலத்தில் வடபழனி பகுதியிலும் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
விஐபி பாதைகள்
இவர்கள் தவிர 10 போலீஸ் ஐ.ஜி.க்களுக்கும் தனித்தனியாக பணி ஒதுக்கப்பட்டுள்ளது. ஐ.ஜி.க்கள் பெரியய்யா, சுமித்சரண், சந்திப்ராய் ரத்தோ ஆகியோர் கிழக்கு மண்டலத்திலும், ஐ.ஜி.க்கள் டேவிட்சன் தேவாசீர்வாதம், ஜெயராம் ஆகியோர் தெற்கு மண்டலத்திலும், ஐ.ஜி.க்கள் சாரங்கன், அயூஷ் மணி திவாரி வடக்கு மண்டலத்திலும், மகேஷ் குமார் அகர்வால், தினகரன் ஆகியோர் மேற்கு மண்டலத்திலும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஐ.ஜி. கருணா சாகர், போக்குவரத்து மற்றும் வி.ஐ.பி.க்கள் வரும் பாதையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். போலீஸ் சூப்பிரண்டுகளும் நேற்று முதலே பாதுகாப்பு பணியை தொடங்கியுள்ளனர்.
போக்குவரத்து மாற்றம்
சென்னை மெரினா கடற்கரை சாலையில் இன்று காலை 7.15 மணிக்கு ஒத்திகை தொடங்கியது. முப்படை வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள் மற்றும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு போன்றவற்றின் ஒத்திகை இன்று நடைபெற்றது. இதனால் கடற்கரை சாலை வழியாக வரக்கூடிய வாகனங்கள் அனைத்தும் மயிலாப்பூர் அண்ணா சாலை வழியாக திருப்பி விடப்பட்டன. இதனிடையே குடியரசு தின ஒத்திகை நடைபெறும் இடத்தை தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி ராஜேந்திரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.