ஏனுங்க.. புறநகர் பஸ் பஸ்டாண்ட் கேட்டா ரூரல் பஸ் ஸ்டாண்ட் கொடுத்திருக்கீங்கோ.. புலம்பும் ஈரோடு மக்கள்
ஈரோடு ஆணைக்கல்பாளையம் ஊரக பேருந்து நிலையத்தை செயல்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.
Recommended Video
ஈரோடு: ஈரோடு ஆணைக்கல்பாளையத்தில் செயல்படாமல் உள்ள ஊரக பேருந்து நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நகரத்தின் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த புறநகர் பேருந்து நிலையம் கேட்டால், ஊரக பேருந்து நிலையம் கிடைத்ததாகவும், அதுவும் தற்போது செயல்படாமல் உள்ளதாகவும் பகுதி மக்கள் புலம்புகின்றனர்.
அந்த வகையில் ஈரோடு அடுத்த ஆனைக்கல்பாளையத்தில் கடந்த 2014 ம் ஆண்டு ஊரக பேருந்துநிலையம் கட்டப்பட்டது. 1.53 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10 பேருந்துகள் நிறுத்துவதற்கு வசதியாகவும், வணிகவளாகங்களுடனும் அமைக்கப்பட்ட நிலையில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா இந்த பேருந்துநிலையத்தை மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
ஆனால் தற்போது வரை இந்த பேருந்துநிலையம் பயன்படுத்தப்படாமல் உள்ளது. காரணம் பேருந்தே வராத சாலையில் அமைக்கப்பட்டு உள்ளதால்தான்.
முழுமை பெறாத சுற்றுவழிசாலை
ஆனால் தற்போது வரை இந்த பேருந்துநிலையம் பயன்படுத்தப்படாமல் உள்ளது. காரணம் பேருந்தே வராத சாலையில் அமைக்கப்பட்டு உள்ளதால்தான். ஈரோட்டில் அமைக்கப்பட்டு வரும் சுற்றுவழிச்சாலையில் இந்த பேருந்துநிலையம் அமைந்துள்ள நிலையில் சுற்றுவழிச்சாலைகள் அமைக்கும் பணிகள் முழுமை பெறாததால் ஊரக பேருந்துநிலையத்திற்கு பேருந்துகள் வருவதில்லை.
அரங்கேறும் சமூகவிரோத செயல்கள்
இந்த பேருந்து நிலையத்தில் 10 பேருந்துகள் நிறுத்துமளவுக்கு இடவசதியும் ஓட்டுனர்கள் நடத்துனர்களுக்கான ஓய்வறைகள், ஆண், பெண் கழிவறை மற்றும் வணிக வளாகங்களும் உள்ளன. வணிக வளாகங்களில் கடைகளை ஏலம் எடுத்த எடுத்தவர்கள் பேருந்துகள் வராததால் கடைகைகளை திறக்க முன்வருவதில்லை . இருந்தும் ஒரு சிலர் மட்டுமே கடைகளை திறந்துள்ளனர் . இதனால் காலை முதல் மாலை வரை ஊரக பேருந்துநிலையத்தில் மதுஅருந்துதல், சூதாட்டம் விளையாடுவது போன்ற சமூக விரோத செயல்கள் அரங்கேறி வருகிறது.
பயன்பாடுக்கு கொண்டு வர கோரிக்கை
இந்த ஊரக பேருந்து நிலையத்தை சுற்றிலும் பலவேறு கிராமங்கள் உள்ளன. அவர்கள் ஈரோடு, கரூர் போன்ற ஊர்களுக்கு வேலைக்கு செல்லும் பொழுது 2 அல்லது 3 கிலோமீட்டர் தூரம் சென்று பேருந்து ஏற வேண்டிய நிலை உள்ளது. கிராமங்களில் உள்ள பலபேர் 2 சக்கர வாகனம் வாங்கும் வசதி கூட இல்லை என்பதால் இதனை பயன்பாட்டிற்கு கொண்டுவர பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். அவ்வாறு பயன்பாட்டிற்கு வந்தால் தங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்றும் தெரிவிக்கின்றனர்.
வீணாகும் மக்களின் வரிப்பணம்
இந்த பேருந்து நிலையத்திற்கு எதிரே ஈரோடு மாவட்ட ஆயுத படை வளாகம் உள்ளது. காவல்துறையின் ஆயுத படை வளாகம் எதிரே இருந்தும் நடைபெறும் சமூக விரோத செயல்களை தடுக்க முடியவில்லையே என்பது வேதனை அளிப்பதாக உள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவினால் 4 ஆண்டுகளுக்கு முன்பாக மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்த பேருந்துநிலையம் செயல்படாதது மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் செயலே.