நீட் மரணத்தை தடுக்கத் தவறிய அரசு மீது அவமதிப்பு வழக்கு.. அனுமதி தர உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை!
நீட் மரணத்தை தடுக்கத் தவறிய அரசு மீது அவமதிப்பு வழக்குதொடர அனுமதி தர உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை: நீட் மரணத்தை தடுக்கத் தவறிய அரசு மீது அவமதிப்பு வழக்குதொடர அனுமதி தருமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மருத்துவப்படிப்புகளுக்கான நீட் தகுதி தேர்வு முடிவுகள் கடந்த 4 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் கடந்த 5 ஆம் தேதி விழுப்புரத்தை சேர்ந்த பிரதீபா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
அவரைத் தொடர்ந்து நேற்று திருச்சி சமயபுரத்தை சேர்ந்த சுபஸ்ரீ என்ற மாணவி நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவங்கள் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
முறையீடு
நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தமிழகத்தில் 2 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் நீட் மரணங்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என வழக்கறிஞர் சூரிய பிரகாசம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.
அரசு மீது புகார்
அரசு தகுந்த நடவடிக்கை எடுத்திருந்தால் நீட் மரணத்தை தடுத்திருக்க முடியும் என்ற அவர், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தமிழக அரசு நீட் மரணத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் கூறினார்.
அனுமதி தர கோரிக்கை
நீட் மரணத்தை தடுக்க தவறிய அரசு அதிகாரிகள் மீது அவமதிப்பு வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும் என்றும் முறையிட்டார்.
12ஆம் தேதி விசாரணை
இதையடுத்து அவரது முறையீட்டை மனுவாக தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து வரும் 12ஆம் தேதி சூரியபிரகாசத்தின் மனு விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.