கஞ்சா கொடுத்து என் மகனை நித்தியானந்தா கடத்திட்டாரே..கேட்பாரே இல்லையா? அதிரவைத்த பெற்றோரின் கதறல்
டாக்டருக்கு படித்த தம் மகனை கஞ்சா கொடுத்து மயக்கி நித்தியானந்தா சாமியார் கோஷ்டி கடத்தியதாக பெற்றோர் பகிரங்க புகார் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
பெரியகுளம்: டாக்டருக்கு படித்த தம் மகனை கஞ்சா கொடுத்து மயக்கி நித்தியானந்தா சாமியார் கோஷ்டி கடத்தி விட்டாரே.. இதை கேட்பார் யாருமே இல்லையா? என பெரியகுளம் நீதிமன்ற வளாகத்தில் பெற்றோர் கதறியது அதிரவைத்துள்ளது.
சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தாவின் பெங்களூரு பிடதி ஆசிரமத்தில் இருந்து டாக்டருக்கு படித்த மகன் மனோஜ்குமார் மற்றும் சிறுமி நிவேதா ஆகியோரை மீட்க வேண்டும் என்று பெரியகுளம் வடகரை சுப்பிரமணிய சாவடிதெரு பகுதியைச் சார்ந்த காந்தி என்பவர் போலீசில் புகார் கொடுத்தார். இப்புகாரின் அடிப்படையில் தேனி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் வீ .பாஸ்கரன் உத்தரவின் பேரில் பெரியகுளம் காவல் ஆய்வாளர் முத்து பிரேம்சந்த் தலைமையில் போலீஸ் டீம் பிடதி சென்றது.
நிவேதா வாக்குமூலம்
அங்கிருந்து மனோஜ்குமார் மற்றும் நிவேதா இருவரையும் மீட்டு அழைத்து வந்து பெரியகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற விசாரணையில் நிவேதா, உறவினர்களுடன் செல்ல விருப்பம் தெரிவித்தார்.
பெற்றோருடன் செல்ல மறுப்பு
இதையடுத்து நிவேதா உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டார். ஆனால் டாக்டர் மனோஜ்குமார் பிடதி ஆசிரமத்துக்கே செல்ல விரும்புவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
பெற்றோர் அதிர்ச்சி
இதனால் அவர் பிடதி ஆசிரமம் செல்ல அனுமதிக்கப்பட்டார். பெற்றோரிடம் எதுவும் சொல்லாமல் டாக்டர் மனோஜ்குமார் பிடதிக்கு சென்றார்.
கேட்பார் யாரும் இல்லையா?
தங்களது கண்முன்னாலேயே மகன் பிரிந்து நித்தியானந்தா ஆசிரமம் செல்வதை தாங்க முடியாமல் வயதான பெற்றோர் கதறி கூச்சலிட்டனர். அப்போது, அய்யோ என் மகனை கஞ்சா கொடுத்து மயக்கி நித்தியானந்தா ஆட்கள் கடத்திட்டு போயிட்டாங்களே... 75 லட்சம் செலவு செஞ்சு டாக்டருக்கு படிக்க வெச்சேனே... இதைக் கேட்குறதுக்கு யாருமே இல்லையா? என கதறினர். இந்த பெற்றோரின் கதறல் நீதிமன்ற வளாகத்தையே அதிர வைத்தது.
அச்சத்தில் மக்கள்
நித்தியானந்தா மீது பல்வேறு புகார்கள், சர்ச்சைகள் உள்ளன. தற்போது பெற்றோரிடம் பிரிந்து குழந்தைகளை பிரித்து கடத்திச் செல்வது பெரும் அச்சத்தை கிளப்பியிருக்கிறது.