கன மழை.. மெஷின்களை வேலை செய்ய விட்டு ஒதுங்கிய மீட்புப் படையினர்!
சென்னை: மவுலிவாக்கத்தில் இடிந்து விழுந்த 11 மாடி குடியிருப்பில் மீட்புப் பணியில் ஈடுபட்டு வரும் மீட்புப் படையினருக்கு நேற்றும் மழை சிரமத்தைக் கொடுத்தது.
அதேசமயம், அவர்கள் மழைக்காக ஒதுங்கி நின்ற நிலையில் இயந்திரங்கள் மட்டும் தங்களது வேலையை தொடர்ந்து செய்து கொண்டிருந்தன.
நேற்று 3வது நாளாக தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வந்தன.
மாலையில் மழை
இந்த நிலையில் நேற்று மாலையும் மழை பெய்ய தொடங்கியது. இதனால் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் அனைவரும் மழைக்காக சற்று ஒதுங்கினர்.
இயந்திரங்கள் வேலை பார்த்தன
எனினும், மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த இயந்திரங்கள் தொடர்ந்து தங்கள் பணியை மேற்கொண்டிருந்தன.
அரை மணி நேரத்திற்குப் பிறகு
சுமார் அரை மணி நேரம் பெய்த மழை நின்ற பின்னர் மீண்டும் மீட்பு பணி வீரர்கள் தங்கள் பணியை தொடங்கினார்கள்.
இரவு பகலாக
இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி, இரவு பகலாக போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.
நூற்றுக்கணக்கானோர்
தேசிய பேரிடர் மேலாண்மை படையினர் 402 பேரும், 360 தீயணைப்பு படையினரும், 750 போலீசார் உள்பட, தமிழக கமாண்டோ படையினர், செஞ்சிலுவை சங்கத்தினரும் மீட்பு பணியில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறார்கள்.
முதலுதவி அளிக்க டாக்டர்கள் குழு
இடிபாடுகளில் சிக்கியவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பதற்காக 30-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் மற்றும் நர்ஸ்கள் அடங்கிய மருத்துவ குழுவினரும் தீவிர பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரியா லட்சுமணன்
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகம் அரசு அலுவலக வளாகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பெரும் தீ விபத்தின் போது, படுகாயமடைந்த பெண் தீயணைப்பு படை அதிகாரி பிரியா லட்சுமணன், மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
ராட்சத கிரேன்கள்
5-க்கும் மேற்பட்ட ராட்சத கிரேன்களும், 100-க்கும் மேற்பட்ட மாநகராட்சி, பொதுப்பணித்துறை மற்றும் பேரிடர் மீட்பு படையினரின் லாரிகளும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
மைக் மூலம் கேட்கிறார்கள்
மீட்பு பணியின் போது, அங்கு போடப்பட்ட துளை வழியாக தீயணைப்பு படை வீரர்கள், யாராவது சிக்கி உள்ளே இருக்கிறீர்களா? என்று ஒலிபெருக்கி மூலம் அவ்வப்போது கேட்டபடி உள்ளனர்.
கை…
நேற்று மாலை 6.30 மணி அளவில், கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து அழுகிய நிலையில் கை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. ஆனால் உடல் கிடைக்கவில்லை.