இறுதிக் கட்டத்தில் மீட்புப் பணிகள்... பலியானோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு!
சென்னை: சென்னை மவுலிவாக்கம் அடுக்குமாடிக் குடியிருப்பு விபத்தில் மீட்புப் பணிகள் கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தை அடைந்து விட்டன. இதுவரை 61 பேர் பலியாகியுள்ளனர். ஆனால் அடுத்தடுத்து இறந்த, அழுகிய உடல்களாக கிடைப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்றே தெரிகிறது.
ஜூன் 28ம் தேதி இந்தக் கோர விபத்து நடந்தது. அன்று முதல் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. நேற்று வரை 61 பேர் இறந்துள்ளனர். 27 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இன்று 7வது நாளாக மீட்புப் பணிகள் தொடருகின்றன.
மீட்கப்பட்டுள்ள இருபதுக்கும் மேற்பட்ட உடல்கள் முகம் சிதைந்து, உடல் சிதைந்து அழுகிய நிலையில் உள்ளன. அடையாளம் காண முடியாத நிலையும் காணப்படுகிறது. மீட்புப்பணியில் தேசிய பேரிடர் மீட்பு படைவீரர்கள், தீயணைப்பு படையினர், போலீஸ் கமோண்டோ படையினர், பொதுப்பணி துறையினர் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
85 சதவீதம் பணிகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், மீதமுள்ள கட்டிட இடிபாடுகளை அகற்றுவதற்கான பணிகள் இன்று தீவிரமடைந்துள்ளன. இன்றும் பல உடல்கள் கிடைக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
தற்போது கட்டடத்தின் தரைத் தளத்தில் மீட்புப் பணிகள் நடந்து வருவதால் இன்று அல்லது நாளைக்குள் மீட்புப் பணிகள் நிறைவடையும் என்று தெரிகிறது.