ஜல்லிக்கட்டு காளைகளை பேணிக் காக்க ஆராய்ச்சி நிலையம்.. சட்டசபையில் பாலகிருஷ்ண ரெட்டி அறிவிப்பு
ஜல்லிக்கட்டு காளைகளை பேணிக் காக்க ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் கால்நடைத் துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தெரிவித்துள்ளார்.
சென்னை: காங்கேய காளைகள் மற்றும் புலிக்குளம் காளைகளை பேணி பாதுகாக்க ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும் என்று அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி அறிவித்துள்ளார்.
இன்று சட்டசபையில் கால்நடைத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்போது, காங்கேயம் காளைகளை காக்க ரூ.2.50 கோடி செலவில் ஈரோட்டில் மாட்டின ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
மேலும், ஜல்லிக்கட்டு விளையாட்டில் பயன்படுத்தப்படும் புலிக்குளம் மாடுகளை பேணிக் காக்க ஆராய்ச்சி நிலையம் ஒன்றை சிவகங்கை மாவட்டத்தில் ரூ.2 கோடி செலவில் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது தவிர, ஏழை மக்களுக்கு தொடர்ந்து வாழ்வாதாரம் கிடைக்க 6.47 கோடியில் புழக்கடை கோழி அபிவிருத்தி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கலப்பின கால்நடையின் உற்பத்தி மற்றும் கரு உருதல் திறனை அதிகரிக்க 6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு தொடர்ந்து வருமானம் கிடைக்கும் வகையில் 100 சிறு பால்பண்ணைகள் அமைக்க 1.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஓசூரில் 6.75 கோடியில் நாட்டுக் கோழி பெருக்க வளாகம் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
நாட்டினப் பசுக்களின் மரபுதன்மையை பாதுகாக்க 50 லட்சத்தில் கால்நடை பண்ணை அமைக்கப்படும் என்றும் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி சட்டசபையில் அறிவித்துள்ளார்.