இடஒதுக்கீடு விவகாரம்: 28ம் தேதி தவ்ஹீத் ஜமாஅத்தின் சிறை செல்லும் போராட்டம்
சென்னை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து வரும் 28ம் தேதி சிறை செல்லும் போராட்டம் நடக்கவிருக்கிறது.
இது குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கூறப்பட்டிருப்பதாவது,
நான் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை உயர்த்தித் தருவேன் என்று அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்களித்தார். அவர் அளித்த வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில் முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை உயர்த்தி தருவதாக அளித்த வாக்குறுதியை ஜெயலலிதா அவர்கள் இன்னும் நிறைவேற்றவில்லை.
அந்த வாக்குறுதியை நிறைவேற்ற மாநில அரசை வலியுறுத்தியும், முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிப்போம் என்று காங்கிரஸ் கடந்த 2004ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குறுதி அளித்தது. மத்திய அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷனும் நாடெங்கும் பயணம் செய்து முஸ்லிம்களின் அவல நிலையை ஆதாரங்களுடன் கண்டறிந்து முஸ்லிம்களுக்கு பத்து விழுக்காடு தனி இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது.
காங்கிரஸ் அளித்த வாக்குறுதியையும், மிஸ்ரா கமிஷன் பரிந்துரையை செயல்படுத்தும் வகையில் இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் 10 சதவிகித ஒதுக்கீடு வழங்க மத்திய அரசை வலியுறுத்தியும், தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை, திருச்சி, கோவை மற்றும் நெல்லை ஆகிய நகரங்களில் வரும் 28ம் தேதி தமிழக முஸ்லிம்கள் இலட்சக்கணக்கில் திரளும் சிறை செல்லும் போராட்டம் நடக்கவிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.