புதிய 200 ரூபாய் நோட்டுகள் ஏடிஎம்மில் எப்போது கிடைக்கும்?
சென்னை: புதிதாக வந்துள்ள 200 ரூபாய் நோட்டுகள் ஏடிஎம்களில் கிடைக்க மேலும் காலதாமதம் ஆகும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
புதிய ரூ.200 நோட்டுகள் சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி கிளைக்கு வந்ததுவிட்டன. வருகிற 28-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் வங்கிகள் மூலம் இந்த நோட்டுகள் தமிழகத்தில் வினியோகம் செய்யப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ரூ.2,000 நோட்டை சிரமம் இன்றி பொதுமக்கள் மாற்றுவதற்காக புதிய ரூ.200 நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கி அச்சிட்டு உள்ளது. இந்த நோட்டுகள் டெல்லி, மும்பை போன்ற முக்கிய நகரங்களில் நேற்று முதல் புழக்கத்துக்கு விடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ரூ.200 நோட்டு எப்போது புழக்கத்துக்கு வரும்? என்று ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது, "சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்துக்கு புதிய ரூ.200 நோட்டுகள் கன்டெய்னர்கள் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது. தொடர் விடுமுறை காரணமாக வங்கிகளுக்கு பிரித்து கொடுக்க முடியவில்லை.
வருகிற 28-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் அனைத்து வங்கிகளுக்கும் பிரித்து கொடுக்க உள்ளோம். பொதுமக்களுக்கு அவரவருடைய வங்கி கிளைகளில் பணம் எடுக்கச் செல்லும்போது வழங்கப்படும். வங்கி கணக்குகளில் இருந்து மட்டுமே பெற முடியும்.
மேலும், ஏ.டி.எம்-ல் புதிய ரூ.200 நோட்டுகள் கிடைப்பதற்கு சற்று காலதாமதம் ஆகும். ஏ.டி.எம். எந்திரத்தில் இதற்கென சில மாற்றங்களை செய்யவேண்டும். அந்த பணிகள் நிறைவடைந்த பிறகு, ஒவ்வொரு வங்கியின் ஏ.டி.எம்.களிலும் புதிய ரூ.200 நோட்டுகள் கிடைக்கும்," என்றார்.