ரிசர்வ் வங்கியே சொல்லிவிட்டது, இது எங்களுடைய பணம்தான் என்று... இன்னும் என்ன சந்தேகம்?
சென்னை : திருப்பூரில் 3 கண்டெய்னர்களில் பிடிபட்ட ரூ.570 கோடி பணம் ரிசர்வ் வங்கிக்குச் சொந்தமானது என்றும், அதனை விசாகப்பட்டினத்துக்கு எஸ்பிஐ கொண்டு சென்ற போது பிடிபட்டது என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.
கடந்த 15ம் தேதி திருப்பூரில் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்திய போது 3 கண்டெய்னர் லாரிகளில் மரப் பெட்டிகளில் பணம் கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்தது.
உடனடியாக அவை பறிமுதல் செய்யப்பட்டு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில், திருப்பூரில் ரூ.570 கோடி பணம் கைப்பற்றப்பட்டதை அடுத்து, தேர்தலை ஒத்தி வைக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணையில், ரிசர்வ் வங்கி சார்பில் ஆஜரான வழக்குரைஞர், ரூ.570 கோடி பணம் ரிசர்வ் வங்கிக்கு சொந்தமானது. ரிசர்வ் வங்கிக்காக விசாகப்பட்டினத்துக்கு ஸ்டேட் வங்கிப் பணத்தை எடுத்துச் செல்லும் போது திருப்பூரில் பணம் பிடிபட்டது என்று வாதிட்டார்.
மேலும், ரூ.570 கோடி பணம் அனுமதி பெற்றே கொண்டு செல்லப்பட்டது. இந்த பணத்தை பரிமாற்றம் செய்ய ஏப்ரல் 18ம் தேதியே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இதுபோன்ற பெருந்தொகை பரிமாற்றம் நடந்துள்ளது. ஆனால், இது தேர்தல் நேரம் என்பதால் பெரிதுபடுத்தப்படுகிறது.
வங்கிகளுக்கு இடையே இப்படி பெரிய தொகை பரிமாற்றம் நடைபெறுவது வழக்கமான ஒன்றுதான் என்றும் ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.
அதற்குள் இந்த கண்டெய்னர்களில் ரூ 5000 கோடி இருந்தது என்றும், ஏற்கெனவே ஏழு கண்டெய்னர்களில் பெரும் பணம் போய்ச் சேர்ந்துவிட்டதென்றும் ஈரைப் பேனாக்கி பேனைப் பெருமாளாக்கிவிட்டார்கள்.
இன்னும் சிலர் இந்தப் பணத்தை மத்திய அமைச்சர் ஒருவருக்கு போகிறதென்றும், தங்கள் பணம் என வங்கிகளைச் சொல்ல வைக்க கமிஷன் வேறு தரப்பட்டதாகவும் பகீர் கற்பனைகளை வெளியிட, அவற்றையெல்லாம் நம்பி அரசியல் தலைவர்களும் விதவிதமாக அறிக்கை விட்டதுதான் பரிதாபம்.