திருச்சி, தஞ்சையில் தகிக்கும் வெப்பம்… உதகையில் ஜில் ஜில்
சென்னை: தமிழகத்தில் திருச்சி, தஞ்சாவூரில் அனலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. இரண்டு ஊர்களிலும் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் நீடிப்பதால் அனல் காற்று வீசுகிறது.
அதே சமயம் உதகையில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளுமை பரவி வருவதால் சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர்.
இன்று தமிழகத்தில் தென் மாவட்டங்களில் வானம் ஒரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 36 மற்றும் 28 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அக்னி நட்சத்திரம்
கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர காலம் இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளது. ஆனால் அதற்கு முன்னதாகவே தமிழகத்தில் வெயில் வெளுத்து வாங்குகிறது. தஞ்சாவூர், திருச்சியில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.
கோவையிலும் வெப்பம்
குளு குளு நகரமான கோவை, திருப்பூரில் கூட வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே உள்ளது அங்கு 36 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. காஞ்சிபுரம், கிருஷ்ணகிரியில் 35 டிகிரி செல்சியஸ் வெப்பமும்,கடலூரில் 34 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகியுள்ளது.
வெயிலோடு மேகமூட்டம்
மதுரை, நாகர்கோவில், ராஜபாளையம், சிவகாசியில் வானம் சற்றே மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. ஆனாலும் 31 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. சேலம், திருநெல்வேலி, தூத்துக்குடியில் 30 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.
வேலூரில் குறைந்த வெப்பம்
கடந்த ஒரு மாதகாலமாக வேலூரில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இன்றைய தினம் வெப்பத்தின் தாக்கம் குறைந்து 29 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது. திருவண்ணாமலையிலும் 29 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.
உதகையில் ஜில் ஜில்
உதகமண்டலத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. ஆனால் இன்றைய தினம் வெப்பம் 17 டிகிரி செல்சியஸ் அளவாக குறைந்து குளுமை பரவியுள்ளதால் அங்கு சுற்றுலா சென்றுள்ள பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
முடங்கிய மக்கள்
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதத் தொடக்கத்திலிருந்தே கடுமையான வெயில் மக்களை வாட்டி வருகிறது. இதனால் பகல் 12 மணி முதல் 4 மணிவரை நெடுஞ்சாலைகளில் மக்கள் போக்குவரத்தும், வாகனப் போக்குவரத்தும் குறைவாகக் காணப்படுகிறது.
காய்ந்து போன மரங்கள்
பூண்டி, பென்னாலூர்பேட்டை, சீத்தஞ்சேரி ஆகிய பகுதிகளில் வனத்துறைக்குச் சொந்தமான பல ஆயிரம் ஏக்கரில் காப்புக் காடுகள் உள்ளன. இங்கு செம்மரம், காட்டு மரம், நாவல் மரம், முந்திரித்தோப்பு உள்ளிட்ட பல வகையான தாவரங்கள் உள்ளன.
தற்போது கடுமையான வெப்பம் காரணமாக காடுகளில் உள்ள மரங்களில் இலைகள் காய்ந்து உதிர்ந்து மொட்டையாக உள்ளது. அதன் இலைகள் காய்ந்த சருகுகளாக காட்டில் பரவிக்கிடக்கிறது.
காட்டுத்தீ அபாயம்
அந்த நேரத்தில் காட்டுப் பகுதியில் சுற்றுலா வருவோரின் கவனக்குறைவு மற்றும் கடுமையான வெப்பம் காரணமாக கடுமையான காட்டுத் தீ பரவும் அபாயம் உள்ளது.
வனத்துறையினர் அறிவுறுத்தல்
எனவே காட்டுப் பகுதிகளில் வனத்துறையினர் இரவும், பகலும் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வனப்பகுதிகளில் சமைக்கவோ, புகைபிடிக்கவோ கூடாது எனவும் சுற்றுலாப் பயணிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.