குடிக்க நீர் கேட்டு மடக்கிய பொதுமக்கள்… பதில் சொல்ல முடியாமல் திணறி எஸ்கேப்பான அமைச்சர் தங்கமணி
குமாரபாளையம் பள்ளிப்பாளையத்திற்கு வந்த அமைச்சர் தங்கமணியின் காரை மடக்கி குடிநீர் கேட்டு பொதுமக்கள் சரமாரி கேள்வி எழுப்பினர். பதில் சொல்ல முடியாத அமைச்சர் போர்வெல் போட்டுத் தருகிறேன் என்று சொல்லி அங்கி
பள்ளிப்பாளையம்: அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த மூத்த அமைச்சர் தங்கமணியை அவரது சொந்த தொகுதி மக்கள் குடிநீர் கேட்டு முற்றுகையிட்டனர்.
குமாரபாளையம் தொகுதிக்கு உட்பட்ட பகுதி பள்ளிப்பாளையம். இந்த இடத்தில் யூனியன் அலுவலகம் அருகே பட்டா வழங்கும் நிகழ்ச்சி அரசு சார்பில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் தங்கமணி நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு காரில் ஏறி சென்றார். அப்போது, சபரி நகர் பொதுமக்கள் அமைச்சரின் காரை மறித்து முற்றுகையிட்டனர்.
முற்றுகை
என்ன செய்வது என்று தெரியாத அமைச்சர் தங்கமணி காரில் இருந்து இறங்கினார். அப்போது முற்றுகையிட்ட பொதுமக்கள் எங்களுக்கு குடிக்க தண்ணீர் இல்லாமல் 15 நாட்களாக கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம். உங்களுக்குத் தானே நாங்கள் ஓட்டுப் போட்டோம் என்று கேள்வி மேல் கேள்வி எழுப்பினார்கள்.
குடிநீர் முக்கியம்
மேலும், நீங்கள் எதுவும் கண்டுக் கொள்ளாமல் சென்னையில் போய் உட்கார்ந்து கொள்கின்றீர்கள். உங்கள் கட்சிப் பிரச்சனை எவ்வளவு முக்கியமோ, அதைவிட நாங்கள் குடிக்கிறதுக்கு தண்ணீர் முக்கியம் என மக்கள் தங்களது குமுறலை வெளிப்படுத்தினார்கள்.
போர்வெல் குழாய்
பொதுமக்களின் கேள்வி கணைகளால் மிரண்டு போன அமைச்சர் தங்கமணி, அதிகாரிகளிடம் பேசி டிராக்டர் மூலமாக தண்ணீர் வழங்குவதாக கூறினார். அப்பகுதியில் புதிய போர்வெல் அமைக்கப்படும் என உறுதி அளித்துவிட்டு அங்கிருந்து அமைச்சர் எஸ்கேப் ஆனார்.
திணறல்
அமைச்சர்கள் அனைவரும் இரட்டை இலையை காப்பாற்றவும், தங்களது அமைச்சர் பதவியை தக்க வைத்துக் கொள்ளவும் படாதபாடு பட்டு வரும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் அமைச்சர்களை பார்த்து கேள்வி கேட்பது தொடங்கிவிட்டது.