காவிரி மேலாண்மை வாரியம்- மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயார்: பொன் ராதாகிருஷ்ணன்
ராஜினாமா செய்வதால் காவிரி வாரியம் அமையும் என்றால் தானும் ராஜினாமா செய்யத் தயார் என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை : காவிரி விவகாரத்தில் தமிழக எம்.பி.,க்கள் ராஜினாமா செய்வதால் மேலாண்மை வாரியம் அமைந்துவிடும் என்றால் தானும் ராஜினாமா செய்யத்தயார் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த ஆறு வாரக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. ஆனால், இதுவரை வாரியம் அமைப்பதற்கான எந்தப் பணியையும் மத்திய அரசு முன்னெடுக்கவில்லை.
இதனால் மத்திய அரசைக் கண்டித்து அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்கள் தொடர்ந்து போரட்டம் நடத்தி வருகின்றன. தமிழக எம்.பி.,க்கள் மத்திய அரசைக் கண்டித்து பதவி விலகவேண்டும் என்கிற கோரிக்கையும் வலுத்துள்ளது.
இந்நிலையில், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, காவிரி பிரச்னை இந்த அளவிற்கு மோசமானதற்கு காங்கிரஸ் அரசு தான் காரணம். அப்போது தமிழகத்தில் இருந்தது திமுக அரசு. இவர்கள் இருவரும் தற்போது பாஜகவை விமர்சிப்பது நியாயம் அல்ல என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வதால் எல்லாம் நடந்துவிடுமா? இப்படிப் பேசி விவசாயிகளை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இதை முழுக்க முழுக்க அரசியல் ஆக்கிவிட்டார்கள். இதை பாஜக என்றைக்கும் ஆதரிக்காது.
தமிழக எம்.பி.,க்கள் ராஜினாமா செய்வதால் காவிரி மேலாண்மை வாரியம் அமைந்துவிடும் என்றால், நானும் ராஜினாமா செய்வதற்குத் தயாராக இருக்கிறேன். ஆனால், ராஜினாமா செய்வதால் நிச்சயம் எதுவும் நடந்துவிடாது. ராஜினாமா செய்யவேண்டுமென்றால், இப்படி பேசிக்கொண்டு இருக்கமாட்டார்கள். அதனால் இது ஒரு நாடகம் என்று அவர் தெரிவித்துள்ளார்.