ஈரோடு அருகே மழையை பயன்படுத்தி தடுப்பணையில் கழிவு நீரை கலந்த கொடுமை.. மக்கள் அதிர்ச்சி!
தடுப்பணையில் சாயகழிவு நீர் கலந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
ஈரோடு: ஈரோடு அருகே தடுப்பணையில் மழைநீருடன் சேர்த்து சாயகழிவு நீரை சாய சலவை உரிமையாளர்கள் கலந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கத்திரி வெயிலால் தவித்த ஈரோட்டு மக்களுக்கு குளிர்ச்சியை தந்தது கொட்டி தீர்த்த கோடை மழை. மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்த மழையினால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்த நேரத்தில் சத்தமின்றி தங்களது வேலையை செய்தனர் சாயதொழிற்சாலை உரிமையாளர்கள்.
பெயரளவுக்கு நடவடிக்கை
சாய சலவை மற்றும் தோல்தொழிற்சாலைகள் தாங்கள் பயன்படுத்தும் நீரை சுத்திகரிப்பு செய்து மீண்டும் பயன்படுத்த வேண்டும் ஒரு சொட்டு தண்ணீர் கூட வெளியேற்ற கூடாது என்பது நீதிமன்ற உத்தரவு. ஆனால் பெரும்பாலான நிறுவனங்கள் இதனை பின்பற்றுவதில்லை. பொதுமக்களிடம் இருந்து புகார் வந்தால் பெயரளவுக்கு மட்டுமே நடவடிக்கை எடுக்கின்றனர் மாசுகட்டுப்பாட்டு அதிகாரிகள்.
கைகொடுக்கும் சூரம்பட்டிஅணைக்கட்டு
இந்நிலையில் ஈரோடு சூரம்பட்டி வலசில் பெரும்பள்ளம் ஓடையின் குறுக்கே அமைந்துள்ளது சூரம்பட்டி அணைக்கட்டு.இந்த தடுப்பணையின் மூலம் சுமார் 2500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் பாதுகாக்கப்படுகிறது. இதில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழக விவசாய சங்கத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அகற்றப்பட்டது.
காத்திருந்த அதிர்ச்சி
மேலும் தனியார் அமைப்பின் சார்பில் தூர்வாரப்பட்டு இதற்கான பாசன வாய்க்காலும் சீரமைக்கப்பட்டது. இந்த அணையில் தண்ணீர் தேக்கப்படுவதால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் தட்டுப்பாடு நீங்கும் என்பது பொதுமக்களின் நம்பிக்கை. இந்நிலையில் நேற்று பெய்த மழையால் தடுப்பணை நிரம்பியிருக்கும் என பார்க்க சென்ற பொதுமக்களுக்கு காத்திருந்தது அதிர்ச்சி.
அணையில் சாயகழிவுநீர்
அணையில் சாயகழிவுநீர் நிரம்பி அதிலிருந்து நுரைகளும் துர்நாற்றமும் எழுந்தது.மழையினை பயன்படுத்தி பெரும்பள்ளம் ஓடை பகுதியில் உள்ள சாய சலவை உரிமையாளர்கள் சாயகழிவை திறந்து விட்டது தெரியவந்துள்ளது. இதனால் வேதனையடைந்த பொதுமக்கள் தடுப்பணையில் கழிவுநீர் கலப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சுற்றுச்சூழல் அமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே இந்தநிலை தொடர்வதுதான் அனைத்து தரப்பினருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.