பவானியில் மணல் எடுக்க பொதுமக்கள் எதிர்ப்பு: 12 லாரிகளை சிறைபிடித்து போராட்டம்
பவானிசாகர் அணையில் மணல் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு: பவானிசாகர் அணையில் மணல் எடுக்க எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள், அங்கு மணல் அள்ள வந்த லாரிகளையும் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி ஆளும் கட்சியினர் அதிகாரிகள் துணையோடு அணைபகுதியிலிருந்து மணலை சட்ட விரோதமாக கடத்துவதாக புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக அதிகாரிகளிடம் புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தியடைந்த கிராமமக்கள் நேற்று மணல் அள்ள வந்த லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 12 லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள், பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரனின் ஆதரவாளர்கள் சிலர் அதிகாரிகள் துணையோடு மணல் கடத்தலில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டினர். இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதனை தொடர்ந்து சம்பவ பகுதிக்கு வந்த அதிகாரிகள் கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சிறைபிடிக்கப்பட்ட லாரிகளை மீட்டனர். கிராம மக்களின் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.