27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளனை விடுவிக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் : ராமதாஸ்
27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளனை விடுவிக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை : ராஜீவ்காந்த் கொலை வழக்கில் எந்த குற்றமுமே இழைக்காமல், 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளனை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை உடனடியாகக் கூடி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் எந்த குற்றமும் இழைக்காத பேரறிவாளன் கைது செய்யப்பட்டு 11-ந் தேதியுடன் 27 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், கைது செய்யப்பட்டு இரு ஆயுள் தண்டனை காலங்கள் முடிவடைந்த பிறகும், ஆயுள் தண்டனை கைதியான பேரறிவாளனை விடுதலை செய்ய தமிழக ஆட்சியாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கைப் பார்ப்பது கண்டிக்கத்தக்கதாகும்.
7 தமிழர்களின் விடுதலை தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் 4½ ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போதெல்லாம் மத்திய அரசு சார்பில் கூறப்படும் ஏதோ ஒரு காரணத்திற்காக ஒத்திவைக்கப்படுவதும், பின்னர் அந்த வழக்கு கிடப்பில் போடப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது.
அவ்வழக்கின் விசாரணையை விரைவுபடுத்த ஆட்சியாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் 27 ஆண்டுகளைக் கடந்தும் அப்பாவிகளின் சிறைவாசம் தொடர்கிறது. சுப்ரீம் கோர்ட்டில் நடைபெறும் வழக்கு ஒருபுறம் இருக்க, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி 67 ஆயுள் தண்டனை கைதிகள் அண்மையில் விடுதலை செய்யப்பட்டதைப் போன்று, அரசியலமைப்பு சட்டத்தின் 161-வது பிரிவைப் பயன்படுத்தி பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலைசெய்ய எந்தத் தடையும் இல்லை.
ஆனால், யாருக்கோ அஞ்சி அந்த வாய்ப்பைப் பயன்படுத்த ஆட்சியாளர்கள் தயங்குகின்றனர். இது ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் இழைக்கப்படும் துரோகமாகும். தமிழர்களுக்கு மத்திய அரசிடம் இருந்து நீதிகிடைக்க வாய்ப்பில்லை என்பதால், அமைச்சரவையை உடனடியாகக் கூட்டி 161-வதுபிரிவின்படி 7 தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி அவர்கள் விடுதலையாவதை அரசு உறுதிசெய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.