இலங்கை போர்க் குற்றங்களுக்கு எதிராக சர்வதேச விசாரணை: தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்
சென்னை: இலங்கை இனப்படுகொலை சம்பவம் குறித்து சர்வதேச விசாரணை தேவை என்று தமிழக சட்டசபையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும், இந்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தன.
இலங்கை இறுதி போரில் தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, ஐ.நா.மனித உரிமைகள் ஆணையத்தில் இன்று அறிக்கை தாக்கலாக உள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா தனி தீர்மானம் ஒன்றை கொண்டுவந்தார்.
சட்டசபையில் இன்று முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த தனி தீர்மானத்தில் "இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும். இதனை இந்திய அரசு ஐ.நா.வில் வலியுறுத்த வேண்டும். போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை என்று ஏற்கனவே அமெரிக்கா வலியுறுத்தியிருந்தது. ஆனால் அமெரிக்கா தனது நிலைப்பாட்டை தற்போது மாற்றியுள்ளது.
ஆனால் இந்தியா இந்த விஷயத்தில் ஐ.நாவுக்கு, நெருக்கடி கொடுத்து, சர்வதேச விசாரணைக்காக பொது வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்த வேண்டும்.
ஒரு லட்சியத்தை பெறுவதற்கு, எத்தைகய தியாகத்தையும் செய்ய வேண்டும் என்றும் நினைப்பது சாதாரணம் என்று கூறிய, பேரறிஞர் அண்ணா அமுத மொழிக்கு ஏற்ப, தமிழகத்தின் லட்சியத்துக்கும், இலங்கை வடக்கு மாகாண சபை தீர்மானத்திற்கு ஏற்பவும், இலங்கை போரின்போது சர்வதேச சட்டம், ஜெனீவா ஒப்பந்தங்களை மீறி, போர்குற்றங்கள் நடத்திய அனைவர் மீதும், சர்வதேச விசாரணை நடத்த இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளுடன் சேர்ந்து ஐ.நா.வில் வலியுறுத்த வேண்டும்..
அமெரிக்கா இலங்கைக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுப்பது தெரிந்தால், இந்தியா, ராஜதந்திர ரீதியில் அமெரிக்காவை தன்பக்கம் இழுத்து, இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்த வேண்டும் என்று, இந்திய பேரரசை, தமிழக சட்டப்பேரவை கேட்டுக்கொள்கிறது.
என்னால் முன்மொழியப்பட்ட இந்த தீர்மானத்தின் மீது, பிற உறுப்பினர்கள் கருத்துகளை தெரிவித்து ஏக மனதாக தீர்மானத்தை நிறைவேற்றி தர உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று முதல்வர் தெரிவித்தார்.
இந்த தீர்மானத்தின் மீது அனைத்து கட்சி உறுப்பினர்களும் பேசினர். அனைத்து கட்சி உறுப்பினர்களும் தீர்மானத்திற்கு ஆதரவு அளித்து பேசினர். இதையடுத்து தீர்மானம் வாக்கெடுப்புக்குவிடப்பட்டது. வாக்கெடுப்பில் எதிர்ப்பு ஏதுமின்றி, ஒருமனதாக தீர்மானம் நிறைவேறியது.