பணியிட மாறுதல் ரத்து.. ஒருவர்கூட பெயிலாகாமல் படிப்பதே ஆசிரியர் பகவானுக்கு தரும் காணிக்கை
மாணவர்கள் அனைவரும் நன்றாக படிப்பதே பகவானுக்கு தரும் காணிக்கையாகும்.
Recommended Video
திருவள்ளூர்: எங்கோ சத்தமில்லாமல் இயங்கி வந்த வெளியகரம் அரசு உயர் நிலைப் பள்ளியானது இன்று இந்தியா முழுவதும் பிரபலமாக்கி உள்ளனர் அப்பள்ளி மாணவர்கள். அதற்கு காரணம் அந்த பள்ளி ஆசிரியர் பகவான்.
பள்ளி விடுப்பு சான்று பெற பள்ளிக்கு வந்த ஆசிரியர் பகவானை மாணவர்கள் சுற்றிக்கொண்டு கதறி அழுதனர். இதனால் திக்குமுக்காடிப் போய்விட்ட ஆசிரியரும் பாசம் காட்டும் மாணவர்களை விட்டுச் செல்ல மனமின்றி கண்ணீர் விட்டு கதறினார். மாணவர்கள்-ஆசிரியர் இடையிலான இந்த பாசப்போராட்ட வீடியோ வைரலானது. இதையடுத்து ஆசிரியர் பகவான் பணிநிரவல் உத்தரவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
பல்வேறு தலைவர்களும், பிரபலங்களும், ஆசிரியரை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். நடிகர் விவேக் ஆசிரியர் பகவானுக்கு நல்லாசிரியருக்கான ஜனாதிபதி விருது வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் ஆசிரியர் பகவான் அதே பள்ளியில் பணி தொடர கல்வி துறை அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர். இதைத்தொடர்ந்து அடுத்து பள்ளி ஆசிரியர் வருகை பதிவேட்டில் மீண்டும் பெயர் சேர்க்கப்பட்டதால் அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழக அரசு மாணவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இது முன்னெப்போதும் நடந்திராத நிகழ்வு. உணர்வுகளில் தமிழக மக்களையும் பிற மாநில மக்களையும் கட்டிப் போட்ட மாணவர்கள் நன்றாக படித்து, அனைத்து பாடங்களிலும் வெற்றி பெறுவதுதான் ஆசிரியர் பகவானுக்கு செய்யும் குரு மதிப்பாகும். அதுமட்டுமல்லாமல் உங்கள் கண்ணீருக்கும், பாசத்திற்கும் முக்கியத்துவம் வழங்கிய அரசுக்கும் பெற்றுதரும் நன்றிகடனாகும். இல்லையென்றால் இது அந்த நேரத்தில் நடைபெற்ற ஒரு உணர்வு ரீதியான போராட்டமாகவே சித்தரிக்கப்பட்டு விடும். முக்கியத்துவம் இல்லாத நிகழ்வாகவும் வருங்காலத்தில் பிரதிபலிக்கப்பட்டுவிடும்.
எனவே இப்போதுள்ள மாணவர்கள் மட்டுமல்லாது, அந்த பள்ளியில் படிக்க வரும் மாணவர்களும் இதை உணர்ந்து நடந்து கொள்வது அவசியம். அதேபோல, பாடத்தை தாண்டி மாணவர்களிடம் பகவான் காட்டிய அக்கறையால்தான் அவர் இந்த அளவுக்கு கவர்ந்திழுக்கப்பட்டதை உணர்ந்து மற்ற ஆசிரியர்களும் பகவானை ஒரு முன்னுதாராணமாக எடுத்து செயல்பட்டால் கல்வித்துறையில் ஒரு பெரிய நல்ல மாற்றத்தை விரைவில் எதிர்பார்க்கலாம்.