அரசிதழில் வெளியிடுவார்களாம், செயல்படுத்தமாட்டார்களாம்.. இது என்ன துக்ளக் ஆட்சியா? ஸ்டாலின் சாடல்
ரேஷன் பொருட்கள் மீதான கட்டுப்பாடுகளை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்ட ரேஷன் பொருட்கள் மீதான கட்டுப்பாடுகளை திரும்பப் பெற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
ஆண்டுக்கு 1 லட்சம் வருமானம் இருப்பவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடையாது எனத் தமிழக அரசு அரசிதழில் வெளியிடப்பட்டது. மேலும், ஏசி, பிரிட்ஜ், கார், 3 அறை கொண்ட வீடுகள் வைத்திருப்போர், அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு ரேஷன் பொருட்கள் கிடையாது என்றும் அறிவிப்பு வெளியானது. இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து உணவுத் துறை அமைச்சர் காமராஜ், அரசாணையில் இடம்பெற்றுள்ள மத்திய அரசின் உணவு பாதுகாப்புச் சட்டத்தின் விதிகள் தமிழகத்திற்கு பொருந்தாது என்று கூறினார். மேலும், ரேஷன் பொருள் விநியோகத்தில் தற்போதைய நிலைமை தொடரும் என்றும், மத்திய அரசின் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில் தமிழகம் இணைந்துவிட்டது என்பதற்காகவே அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் காமராஜ் விளக்கம் அளித்தார்.
இந்நிலையில் இது தொடர்பான குளறுபடிகள் நீக்கப்பட வேண்டும் என்றும் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பொருட்களின் மீதான கட்டுப்பாடுகள் திரும்பப் பெற வேண்டும் என்றும் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
மேலும், ரேஷனில் பொருள் வாங்குவோரின் எண்ணிக்கையைக் குறைப்பதே அரசின் நோக்கம் என்பது அரசிதழ் அறிவிப்பிலிருந்து உறுதியாகிறது என்றும், அரசிதழில் வெளியிடப்பட்ட ஒரு விதி கடைப்பிடிக்கப்படாது என அமைச்சர் காமராஜ் தெரிவித்திருப்பது இதை துக்ளக் தர்பார் ஆட்சி என்றே கருதத் தோன்றுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசின் இந்த முடிவால் ஏழை எளிய மக்கள் அரிசியை வெளிச்சந்தையில் அதிக விலை கொடுத்து பொருட்களை வாங்க வேண்டிய நிலை ஏற்படும் என்ற கூறிய ஸ்டாலின், ஏழை, நடுத்தர மக்களைப் பாதிக்கும் அரசிதழ் அறிவிப்பைத் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று கோரியுள்ளார்.