நீட் தேர்வுக்கு 5 நிமிட தாமதமானதால் அனுமதி மறுப்பு... ஆத்திரமடைந்த பெற்றோர் மறியல்
நீட் தேர்வுக்கு 5 நிமிடங்கள் தாமதமாக வந்ததால் அவர்களை தேர்வு மையத்தினுள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சென்னை: நாட்டின் பிற மாநிலங்களின் உள்ள பாடத்திட்டத்தின் தரத்தைக் காட்டிலும், தமிழகத்தில் உள்ள பாடத்திட்டங்களின் தரம் சற்று குறைந்ததுதான் என்பதால் தமிழக மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்வது சற்று கடினம் என்று தமிழக அரசு வாதிட்டது.
இந்த தேர்வால் கிராமப்புறத்தில் உள்ள மாணவர்களின் மருத்துவர் கனவு பொசுக்கப்படும் நிலை ஏற்படும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது. எனினும் அதை மத்திய அரசு வழக்கும்போல் செவிமடுத்து கேட்கவில்லை.
நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க சட்டசபையில் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதுகுறித்து மத்திய அரசிடம் விளக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் கவலை கொள்ள வேண்டாம் என்று தமிழக அரசு உறுதி அளித்தது. அதே நேரத்தில் தேர்வுக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் அனுப்பிவிட்டு பரீட்சைக்கு தயாராகுங்கள் என்று தமிழக அரசு தெரிவித்தது.
தலைகீழாக நின்றாலும்...
தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் நட்டாவிடம் கோரிக்கை மனுக்களை அளித்தார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் இதுகுறித்து பலமுறை பிரதமரிடம் பேசியுள்ளார். என்னதான் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் மத்திய அரசு மசியவில்லை.
இன்று நீட் தேர்வு
விலக்கு பெற்று விடுவோம், விலக்கு பெற்று விடுவோம் என்று தமிழக அரசு கூறி கொண்டே மட்டும் இருந்ததால் இன்று தேர்வு நடைபெற்றது. தமிழகத்திலிருந்து 88,000 மாணவ, மாணவிகள் தேர்வை எழுதினர். நாடு முழுவதும் 11.35 லட்சம் பேர் எழுதினர். தேர்வுக்கு தயாராவதற்கு கூட மாணவர்கள் அவதிப்பட்டிருக்க மாட்டார்கள் போல, ஆனால் தேர்வு மையத்துக்கு வந்த மாணவர்களுக்கு மத்திய அரசு கடும் கெடுப்பிடிகளை விதித்தது.
மாணவர்கள் அவதி
முழுக்கை சட்டையும், வாட்சு, கம்மல், மூக்குத்தி, வளையல் கொலுசு, தலைக்கு ஹேர் பின் உள்ளிட்ட அணிகலன்களையும் அணியக் கூடாது என்று கெடுபிடி விதிக்கப்பட்டது. எனினும் முழுக்கை, முக்கால் கை சட்டை, சுடிதார் அணிந்து வந்த மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அவர்களது முழுக்கைகள் கத்தரியால் கத்தரிக்கப்பட்டது.
5 நிமிடங்கள் தாமதம்
இந்நிலையில் தருமபுரி, ஒசூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாணவிகள் உள்பட 3 பேர் சேலத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு நீட் தேர்வு எழுத வந்தனர். அப்போது 5 நிமிடங்கள் தாமதமாக வந்ததாகக் கூறிய அதிகாரிகள் அவர்களை அனுமதிக்க மறுத்துவிட்டனர். பெற்றோர் முறையிட்டும் பயனில்லை.
சாலை மறியல்
இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பின்னர் தகவலறிந்த போலீஸார் அங்கு வந்து பெற்றோரிடம் சமாதானம் பேசினர். எனினும் தேர்வு எழுதுவதற்கு மாணவர்கள் அனுமதிக்கப்படாததால் கண்ணீருடன் ஊர் திரும்பினர்.