500, 1000 பிரச்சினை... கோயம்பேட்டில் 75% விற்பனை பாதிப்பு... வியாபாரிகள் கவலை!
ூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பால், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இரண்டு நாட்களில் மட்டும் கிட்டத்தட்ட 75 சதவீதம் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரி
சென்னை: ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பால், எப்போதும் பரபரப்பாக காணப்படும் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனை மந்தம் அடைந்துள்ளது. இந்த இரண்டு நாட்களில் மட்டும் கிட்டத்தட்ட 75 சதவீதம் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு பழைய 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இதனால் நாட்டில் சில்லறைப் பிரச்சினை பூதாகரமாக உருவானது.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் திடீரென செல்லாமல் போனதால் சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பெரும்பாலான கடைக்காரர்கள் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் வாங்குவதை தவிர்த்தனர். வங்கிகளும், ஏ.டி.எம். மையங்களும் செயல்படாத நிலையில் கையில் இருப்பு உள்ள பணத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு ஏற்பட்டது.
இதனால் எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று விற்பனை மந்தமாக இருந்தது. சில்லறைப் பிரச்சினையால் பொருட்கள் வாங்க வந்த பலர் வெறுங்கையுடன் திரும்பினர்.
சிலர் வேறு வழியின்றி தேவைக்கும் அதிகமாக 500 ரூபாய்க்கும் ஒரே கடையில் காய்கறிகள் மற்றும் பழம் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
ஆனபோதும், வழக்கத்தைவிட நேற்று முன் தினம் இரவும், நேற்றும் வியாபாரம் மந்தமாகவே இருந்ததாக கோயம்பேடு வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 75 சதவீதம் விற்பனைக் குறைந்துள்ளதாக அவர்கள் கவலையுடன் கூறியுள்ளனர்.
இதனால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள், பழங்கள் மற்றும் பூக்களின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்தது. வியாபாரம் மந்தமாக இருந்ததால் பலர் கடைகளை அடைத்து விட்டு சென்று விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.