அரசுப் பள்ளி கட்டிடம் கட்ட ரூ. 4 கோடி நிலம் தானம்... ஈரோடு முன்னாள் ஹெச்.எம். ஈர மனசு!
ஈரோட்டில் பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்காக ரூ. 4 கோடி மதிப்புள்ள நிலத்தை முன்னாள் பள்ளித் தலைமை ஆசிரியை தானமாக அளித்துள்ளார்.
ஈரோடு: பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்காக ரூ. 4 கோடி மதிப்பிலான நிலத்தை தானமாகக் கொடுத்துள்ளார் ஈரோட்டைச் சேர்ந்த 80 வயதான முன்னாள் பள்ளி தலைமை ஆசிரியை பொன்மணிதேவி.
ஈரோடு மாவட்டம் சித்தோடுவைச் சேர்ந்தவர் பொன்மணிதேவி (80). தமிழாசிரியையான இவர் கடந்த 1964ம் ஆண்டு அரசுப் பணியில் சேர்ந்துள்ளார். சுமார் 32 வருடங்கள் ஆசிரியையாக பணி புரிந்த பொன்மணி, கடந்த 1996ம் ஆண்டு கோபிசெட்டிப்பாளையம் தாலுகாவில் உள்ள முடிச்சூர் அரசு பள்ளியில் தலைமையாசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றார்.
ஓய்வுக்குப் பின்னரும் மாணவர்களின் கல்வி குறித்தே சிந்தித்து வந்த பொன்மணி, கடந்த 2006ல் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் விடுதி கட்டுவதற்காக தன்னுடைய 25 செண்ட் நிலத்தை கொடுத்தார். பின்னர் 2015ல் சித்தோட் அரசு பள்ளி கட்டிடத்தை மேம்படுத்துவதற்காக 2 லட்சம் வழங்கினார். இந்நிலையில் தற்போது, சித்தோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்காக நான்கு கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு ஏக்கர் நிலத்தை அவர் தானமாக வழங்கியுள்ளார்.
இதற்கான பாராட்டு விழா நேற்று முன் தினம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பொன்மணியைப் பாராட்டினர். அப்போது, நிலத்தானம் செய்வதற்கான பத்திரத்தை பொன்மணி வழங்கினார்.
பொன்மணியின் கணவர் குமார நடராஜ வரதப்பன் கணவர் 20 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். அவரது ஒரே மகன் மயூரா கார்த்திகேயனும் டாக்டருக்குப் படித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதனால் தற்போது தன் சகோதரி மாரத்தாள் மற்றும் அவரின் மகன்கள் அரவணைப்பில் பொன்மணி வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.