அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் சந்தானம் கமிஷன் விசாரணை தொடக்கம்!
பேராசிரியை நிர்மலா தேவி மீதான புகார் பற்றி அவர் பணியாற்றிய தேவாங்கர் கல்லூரியில் அதிகாரி சந்தானம் விசாரணையைத் தொடங்கியுள்ளார்.
Recommended Video
அருப்புக்கோட்டை : மாணவிகளுக்கு தொலைபேசியில் பாலியல் ஆசை காட்டிய பேராசிரியை நிர்மலா தேவி பணியாற்றிய தேவாங்கர் கல்லூரியில் அதிகாரி சந்தானம் தலைமையிலான குழு விசாரணையை தொடங்கியுள்ளது.
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்லும் விதமாக அவர்களை மூளைச் சலவை செய்த பேராசிரியை நிர்மலா தேவியின் ஆடியோ வெளியானது. இதனையடுத்து நிர்மலா தேவி விவகாரத்தில் உண்மை நிலவரம் என்ன என்பதை விசாரிக்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழுவை அமைத்தது.
சந்தானம் நேற்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தனது விசாரணையைத் தொடங்கினார். சுமார் 3 மணி நேரங்கள் பல்கலைக்கழக பதிவாளர், துணைவேந்தர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தியதோடு, நிர்மலா தேவியின் கல்வி மற்றும் அனுபவம் தொடர்பான ஆவணங்களை வாங்கி வைத்துள்ளார்.
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக மாணவிகளிடமும் விசாரணை நடத்த வேண்டியுள்ளதால் சந்தானம் குழுவில் விசாரணை அதிகாரிகளாக அன்னை தெரசா பல்கலைக்கழக பேராசிரியை கமலி, வேளாண்கல்லூரி பேராசிரியை தியாகேஸ்வரி உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சந்தானம் தலைமையிலான இந்தக் குழு இன்று அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் விசாரணை நடத்துகின்றனர். அதே கல்லூரியில் படித்த நிர்மலா தேவி யாருடைய உதவியின் மூலம் கல்லூரி பேராசிரியராக வந்தார். நிர்மலா தேவி மற்ற மாணவர்களிடம் எப்படி நடந்து கொண்டார், பணியின் போது அவருடைய செயல்பாடுகள் எப்படி இருந்தன உள்ளிட்டவை குறித்தும் விசாரிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.