இரவு முழுவதும் சென்னை விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்ட மாஜி நீதிபதி கர்ணன்
சென்னை: கோவையில் கைது செய்யப்பட்ட உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கர்ணன் சென்னை விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். இரவு முழுவதும் விமான நிலைய ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டு இன்று காலை கொல்கத்தாவிற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் கர்ணன். நீதிபதிகள் மீது குற்றச்சாட்டுகளை கூறியதை தொடர்ந்து கொல்கத்தா உயர்நீதிமனற நீதிபதியாக மாற்றப்பட்டார். அதன் பிறகும் உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற இன்னாள், முன்னாள் நீதிபதிகள் மீது அவதூறு பரப்பியதால் அதுகுறித்து நேரில் விளக்க வேண்டு்ம என்று கர்ணனுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
ஆனால் அவர் நேரில் ஆஜராகவும் இல்லை, விளக்கமும் அளிக்க வில்லை. இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதைத்தொடர்ந்து கைதிலிருந்து விலக்களிக்க பல முறை மனு தாக்கல் செய்தும் உச்சநீதிமன்றம் அதை நிராகரித்தது. எனவே கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க கர்ணன் தலைமறைவாக இருந்தார். தலைமறைவாகவே இருந்த நிலையில் நீதிபதி கர்ணன் கடந்த ஜூன் 12-ஆம் தேதி ஓய்வு பெற்றார்.
இருப்பினும் கர்ணனை தேடும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கர்ணன் கோவை மாவட்டத்தில் உள்ள மலுமிச்சம்பட்டியில் தங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி இன்று மாலை போலீசார் மலுமிச்சம்பட்டி சென்று கர்ணனை கைது செய்தனர். பின்னர்
இரவு 12.20 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட கர்ணன், விமான நிலைய ஓய்வறையில் தங்கவைக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து இன்று காலை 11.40 மணிக்கு அவரை கொல்கத்தாவிற்கு அழைத்துச் செல்ல போலீசார் ஏற்பாடு செய்து வருகின்றனர். கொல்கத்தா செல்லப்படும் கர்ணன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என மேற்குவங்க போலீசார் தெரிவித்துள்ளனர்.