மெரினா கலவரம்... ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் அம்பேத்கர் பாலத்தில் ஆய்வு
மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் முடிவில் கலவரம் வெடித்தது. இந்தக் கலவரம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஷ்வரன், அம்பேத்கர் பாலத்தில் வசிக்கும் பாதிக்கப்பட்ட மக்களிடம் ஆய்வு மேற்கொண்
சென்னை: மெரினா கலவரம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவின் தலைவர் ராஜேஷ்வரன் அம்பேத்கர் பாலம் சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆய்வு மேற்கொண்டார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் தொடர் போராட்டம் மாணவர்களால் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தின் முடிவில் கலவரம் வெடித்தது.
இந்தக் கலவரத்தில் போலீசாரே குடிசைகள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களுக்கு தீ வைத்தனர். இது பெரும் அதிர்ச்சியை தமிழக மக்களிடையே ஏற்படுத்தியது.
ஒரு நபர் கமிஷன்
இதனையடுத்து, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழு ஒன்றை அமைத்தார். இந்தக் குழு கலவரம் குறித்து தமிழகம் முழுவதும் விசாரணை செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
கள ஆய்வு
இதன்படி, விசாரணைக் குழுவின் தலைவர் ராஜேஷ்வரன், கலவரம் தொடங்கிய மெரினாவில் ஆய்வை தொடங்கினார். பின்னர், மதுரை, அலங்காநல்லூர், கோவை, சேலம் உள்ளிட்ட கலவரம் நடைபெற்ற இடங்களை ஆய்வு செய்தார்.
அம்பேத்கர் பாலத்தில் ஆய்வு
இதன் தொடர்ச்சியாக இன்று மெரினா கலவரம் நடைபெற்ற பகுதியில் உள்ள அம்பேத்கர் பாலத்திற்கு ராஜேஷ்வரன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். சுமார் 100க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட மக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தார்.
அறிக்கை
பாதிக்கப்பட்டவர்கள், கலவரத்தை நேரில் பார்த்தவர்கள் என அனைவரும் ஒரு நாள் அழைக்கப்பட்டு முழு விசாரணையை நீதிபதி ராஜேஷ்வரன் மேற்கொள்வார். முழு விசாரணை நடத்தி முடித்த பின்னர், 3 மாதத்திற்குள் விசாரணை அறிக்கையை அவர் தமிழக அரசுக்கு அளிப்பார்.