கோவையில் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் மடியேந்தி ஆர்ப்பாட்டம்.. ஏராளமானோர் பங்கேற்பு
சத்துணவு ஊழியர்கள் மடியேந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: மருத்துவ காப்பீடு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக மடியேந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழகம் முழுவதும் ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளைக் வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக குறைந்தபட்சம் பென்சனாக ரூ.7850 வழங்க வேண்டும், மருத்துவப்படி ரூ.300 வழங்குவது மட்டுமல்லாமல் மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும், பொங்கல் போனஸ் மற்றும் இலவச பஸ்பாஸ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன் வாடி ஊழியர்கள் மடியேந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதுகுறித்து அவர்கள் கூறும்போது, பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் தங்களைக் அரசாங்கம் கவனத்தில் கொள்ளவில்லை என வருத்தம் தெரிவித்தனர். தற்போது மாதம் வழங்குகின்ற இந்த 2000 ரூபாய் பென்சன், வயதான காலத்தில் தங்களின் மருத்துவ செலவுகளுக்கு கூட போதாது என வேதனை தெரிவித்த ஊழியர்கள், தங்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்கவில்லை என்றால் மாநில தழுவிய தொடர் போராட்டங்களை முன்னெடுக்க போவதாகவும் கூறினர்.