சட்டசபை முன் ஓய்வு பெற்ற போலீசார் குடும்பத்தினர் கைது!
சென்னை: வழக்கமாக காவல்துறை மானியக்கோரிக்கை என்றால் எதிர்கட்சிகள்தான் பிரச்னையை கிளப்புவார்கள். ஆனால் இந்த ஆண்டு போலீசாரின் குடும்பத்தினரே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தலைமைச் செயலக வளாகத்தை இன்று காவலர்கள் குடும்பத்தினர் முற்றுகையிடுவார்கள் என்ற உளவுத்துறை தகவலை அடுத்து பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அதையும் தாண்டி, ஓய்வு பெற்ற காவல்துறையினர் உள்பட 20க்கும் மேற்பட்டவர்கள்கூடி கோஷம் எழுப்பினர். அங்கு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துக்கொண்டிருந்தவர்களை வட சென்னை கூடுதல் ஆணையர் சுதாகர் தலைமையிலான குழுவினர் அப்புறப்படுத்தினர்.
ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் செல்வ அழகன் பேட்டியளித்தபோது, இந்தியாவிலேயே தமிழக காவலர்களுக்குத்தான் குறைவான சம்பளம் வழங்கப்படுவதாக தெரிவித்தார். 24 மணிநேரம் பணியாற்றும் காவலர்களுக்கு உரிய பணிப்பாதுகாப்பு, குடும்ப பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்யவேண்டும், அதேபோல், காவலர்கள் நலனுக்குகாக தொடங்கப்பட்ட துறை என்ன செய்கிறது என்று கண்ணீர் விட்டு கதறினார்.
இவரின் பேட்டியின் நடுவில் புகுந்த காவல்துறை அதிகாரிகள் செல்வ அழகன் உள்ளிட்டவர்களை அழைத்துச் சென்று வாகனங்களில் ஏற்றினர். அவர்களை தற்போது தனியார் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.