திருப்போரூரில் ரிடையர்ட் பேராசிரியை கழுத்து நெறித்து கொலை: நகை, பணம் கொள்ளை
காஞ்சிபுரம்: திருப்போரூர் அருகே கேளம்பாக்கம் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியை கழுத்தை நெறித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரை அடுத்த தையூர் கேளம்பாக்கம் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ஹெப்சிபா(59). ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியை. அவரது கணவர் ஜெயக்குமார் இறந்துவிட்டார். ஹெப்சிபா நெல்லையில் உள்ள தனியார் கல்லூரியில் பணியாற்றி கடந்த ஆண்டு தான் ஓய்வு பெற்றார்.
இந்நிலையில் ஹெப்சிபா கடந்த ஜனவரி மாதம் தான் தனது மகன் ஜிப்சனுடன்(24) இந்த குடியிருப்புக்கு குடி வந்தார். ஜிப்சன் மஹிந்திரா சிட்டியில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினியராக உள்ளார். அவர் காலையில் கிளம்பி வேலைக்கு சென்றால் இரவு தான் வீட்டுக்கு வருவார்.
நேற்று காலையில் ஜிப்சன் வேலைக்கு சென்றுவிட்டார். இரவு 7.15 மணிக்கு அவர் வீடு திரும்பியபோது கதவு திறந்து கிடந்துள்ளது. உள்ளே சென்று பார்த்தபோது ஹெப்சிபா கழுத்து நெறித்துக் கொல்லப்பட்டு பிணமாகக் கிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த கேளம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஹெப்சிபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஹெப்சிபா அணிந்திருந்த தங்க செயின், வீட்டில் இருந்த பணம் ஆகியவை திருடு போயிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.