கட்டி வைத்து அடிக்கப்பட்ட செல்விக்கு சிகிச்சை தர மறுத்து வெளியேற்றிய மருத்துவமனை.. ஷாக் சம்பவம்
கரண்ட் கம்பத்தில் கட்டி வைத்த செல்விக்கு மீண்டும் சிகிச்சை அளிக்கப்படுகிறது
Recommended Video
விருதாச்சலம்: கரண்ட் கம்பத்தில் கட்டி வைத்து அடித்த செல்விக்கு சிகிச்சை தர முடியாது என்று ஆஸ்பத்திரியில் இருந்து கட்டாயப்படுத்தி வெளியேற்றினார்கள். ஆனால், போராட்டத்துக்கு பிறகு செல்விக்கு, மறுபடியும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விருத்தாசலம் அருகே உள்ள விளாங்காட்டூர் கிராமத்தை சேர்ந்த தம்பதி பொன்னுசாமி- செல்வி. இவர்களின் 25 வயதுடைய பெரியசாமி என்ற மகன், அதே ஊரை சேர்ந்த கொளஞ்சி என்பவரின் மகள் பவளியை காதலித்து வந்துள்ளார்.
விஷயம் வீட்டுக்கு தெரிந்ததும், பவளிக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்துவிட, காதலர்கள் இருவரும் சில நாள்கள் முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டனர். இதனால் இரு குடும்பத்தினர் இடையே பிரச்னை இருந்து வந்தது. 2 தினங்களுக்கு முன்பு பெரியசாமியின் தாய் செல்வியிடம், பவளியின் தந்தை கொளஞ்சி தகராறில் ஈடுபட்டுள்ளார்.
கட்டி வைத்து அடித்தார்
மேலும் "ஏன் உன் மகன் என் மகளை இன்னும் வீட்டிற்கு அழைத்து வந்து விடவில்லை, உன் மகன் என் மகளை எங்கே வெச்சிருக்கான்?" என்று கேட்டு செல்வியை சகட்டுமேனிக்கு திட்டி அங்கிருந்த மின்கம்பத்தில் கட்டி வைத்தும் தாக்கினார். இது சம்பந்தமான போட்டோக்கள், வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் வெளிவந்து அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சிகிச்சை
படுகாயம் அடைந்த செல்வியை மீட்ட போலீசார் சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதையடுத்து செல்வியை தாக்கிய கொளஞ்சி ஜாமீனில் வெளியே வந்தார். உடனே, விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த செல்வி, திடீரென வலுக்கட்டாயமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.
வெளியேற்றப்பட்டார்
ஏன் வெளியேற்றப்பட்டார் என்றே தெரியவில்லை. அவருக்கு ஏற்பட்ட காயம் முழுசாக சரியாகவே இல்லை. அதனால் வேதனை அடைந்தார். ஆனாலும், ஆஸ்பத்திரியை விட்டு போகாமல், அந்த வளாகத்திலேயே தரையில் படுத்திருந்தார். இந்த விஷயம் சிபிஎம் கட்சியின் வட்ட செயலாளர் அசோகன், மற்றும் மாதர் சங்கத்துக்கு தெரியவந்தது.
போராட்டம்
அதனால் உடனடியாக செல்வியை பார்க்க ஆஸ்பத்திரி ஓடினார்கள். உடல்நலம் கெட்டு தரையில் சுருண்டு படுத்திருந்த செல்வியை பார்த்ததும், அவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். செல்விக்கு உடனே ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று முழக்கமிட்டனர். தகவலறிந்து, போலீசார் வந்துவிட்டனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி திரும்பவும் செல்விக்கு சிகிச்சை அளிப்பதாக சொல்லி, ஆஸ்பத்திரி உள்ளே கூட்டி சென்றனர்.
கைது
ஆனால் அப்போதும் போராட்டக்காரர்கள் அங்கிருந்து கிளம்பவில்லை. கொளஞ்சியை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கையை வலுவாக முன்வைத்தனர். இதையடுத்து போலீசார் கொளஞ்சியை திரும்பவும் கைது செய்தனர்.