நெல்லையில் வருவாய்த்துறையினர் விடுப்பு எடுக்கும் போராட்டத்தால் காலியான அலுவலகங்கள்
கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை மாவட்ட வருவாய்த்துறையினர் விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
நெல்லை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறையினர் இருநாள் விடுப்பு எடுக்கும் போராட்டம் நடத்தி வருவதால் நெல்லை மாவட்டத்தில் அலுவலகங்கள் பூட்டி கிடக்கின்றன.
தமிழகத்தில் அரசு நிர்வாகத்தின் முதுகெலும்பாய் திகழும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அலுவலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கனவே ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டும் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்காததால், இன்று முதல் இரு நாள் விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் பல ஊழியர்கள் அலுவலகங்களுக்கு வரவில்லை.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளாக , மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய பென்சன் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும்.
பணித்தன்மைக்கு ஏற்ப வருவாய் துறையில் புதிய பணியிடத்தை உருவாக்க வேண்டும். தகுதிகாண் பருவம் மற்றும் பணிவரன்முறை செய்யப்பட்ட கோப்புகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அரசு உடனே இதில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் அலுவலர்கள் ஈடுபட்டனர்.
நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் அலுவலர் முதல் உதவியாளர்கள் வரை யாரும் பணிக்கு வரவில்லை. துணை ஆட்சியர் மட்டுமே பணிக்கு வந்திருந்தனர். அவர்களுக்கு உதவ உதவியாளர்கள் வரவில்லை.
இதையடுத்து சிறிது நேரத்தில் அலுவலகம் பூட்டப்பட்டது. இதுபோல் தென்காசி, சங்கரன்கோவில், சேரன்மகாதேவி, தூத்துகர்குடி, கோவில்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் தாலுகா அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் பொது மக்களுக்கு சான்று வழங்கும் பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.