வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை என வருவாய் துறை பெயர் மாறியது- அரசாணை வெளியீடு
தமிழக வருவாய்துறையின் பெயர் இனி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை என வருவாய்துறைக்கு பெயர் மாற்றம் செய்து அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அனைத்து அரசு துறைகளுக்கும் தாய்த் துறையாக திகழுவது வருவாய்த் துறையாகும். அனைத்து நிலங்களும் வருவாய்த்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதாகும்.
நிலம் தொடர்பான ஆவணங்களை பராமரிப்பதும், நிலம் தொடர்பான ஆணைகளை வெளியிடுவதும், அரசு நிலங்களை பாதுகாப்பதும், நிலம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படுவதும் வருவாய்த் துறையின் முக்கிய கடமைகள் ஆகும்.
வருவாய்த் துறை செய்யும் பணியின் அடிப்படையில் 2002ஆம் ஆண்டிலிருந்து வருவாய் நிர்வாகம், பேரிடர் மேலாண்மை மற்றும் தணிக்கும் துறை என அழைக்கப்படுகிறது.
வருவாய் நிர்வாகம், பேரிடர் மேலாண்மை மற்றும் தணிக்கும் துறை, நில நிர்வாக துறை, நில சீர்திருத்தத்துறை, நகர நில உச்சவரம்பு மற்றும் நகர நிலவரித்துறை மற்றும் நில அளவை துறை என 5 துறைகளை உள்ளடக்கியது.
கடந்த 2004-ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி சுனாமி தாக்கிய பின்னர் பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு வழங்கும் பணிகளில் வருவாய் துறை பேசப்பட்டது.
அதன் பின்னர் வருவாய் துறை சார்பில் பேரிடர் மேலாண்மை ஆணையம் உருவாக்கப்பட்டது. இதன் தலைவர் முதல்வர் ஆவார். இந்த ஆணையம், பேரிடர் தொடர்பான பணிகளை ஒருங்கிணைத்தது.
பெரும்பாலான மாநிலங்களில், வருவாய் துறையானது, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், தமிழகத்திலும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை என, பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை என பெயர் மாற்றம் செய்து அரசாணையை இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ளது.