தமிழகத்தில் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் 18ம் தேதி வெளியீடு - சந்தீப் சக்சேனா அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் வரும் 18 ஆம் தேதி வெளியிடப்படுகிறது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறி உள்ளார்.
இதுகுறித்த அவரது அறிக்கையில், "இந்திய தேர்தல் ஆணையத்தால் கடந்த மார்ச் மாதம் 3 ஆம் தேதி தேசிய வாக்காளர் சீரமைப்பு மற்றும் அங்கீகார திட்டம் தொடங்கப்பட்டது. இதன்படி நூறு சதவீத திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த திட்டம் தமிழகத்தில் மிகச்சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் போன்றவற்றுக்காக 16.40 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன. மேலும் இறந்த வாக்காளர்கள் மற்றும் வேறு இடங்களுக்கு மாறிய வாக்காளர்கள் விபரங்களை கண்டறிய மாவட்ட தேர்தல் அதிகாரி நேரடியாக சென்று களஆய்வு செய்து பெயரைநீக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
இறந்த மற்றும் வேறு இடங்களுக்கு மாறி சென்றவர்கள் தொடர்பான விவரங்கள் தேர்தல் அதிகாரி மற்றும் உதவி தேர்தல் அதிகாரிகளின் அலுவலகங்களில் உள்ள அறிவிப்பு பலகையில் வரும் 18-ந்தேதி (சனிக்கிழமை) திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் ஒட்டப்படும். அதுபோல் ஒவ்வொரு மாவட்டத்திலும் தொகுதி வாரியாக நீக்கப்படும் வாக்காளர்கள் பெயர், விபரங்கள் மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் ஒட்டப்பட உள்ளது. இதனை வாக்காளர்கள் சரிபார்த்து கொள்ளலாம்.
இதுதொடர்பான முழுவிபரங்கள் அடங்கிய சிடி அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கும் அனுப்பப்படும். மேலும் அனைத்து விபரங்களும் தலைமை தேர்தல் அலுவலக இணையதளத்தில் வெளியிடப்படும்" என்று தெரிவித்துள்ளார்.